Home Blog Page 307

யாழ். உதயன் பத்திரிகை மீதான ஊடக படுகொலையின் நினைவு நாள்

image_pdfPRINT

யாழ்.  உதயன் பத்திரிகையின் ஊடகப்படுகொலை நினைவுநாள் இன்று யாழ் பொதுநூலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது

கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் 02ஆம் திகதி உதயன் பத்திரிகை நிறுவனம்  மீது ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் நினைவாக இந்நாள் அனுஸ்டிக்கபட்டது.
 உதயன் குழுமத்தின் ஏற்பாட்டில் மூத்த ஊடகவியலாளர் யோகேந்திரநாதன் தலைமையில் இந்நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது
 இதன்போது ஊடகத்துறை மற்றும் உதயன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பலியான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களின் உருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது
 யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,ஈஸ்வரபாதம் சரவணபவன,எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மூத்த ஊடகவியலாளர்கள் ஊடகநிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

இரத்த வெள்ளத்தில் இருந்தவர்கள் கத்தினார்கள்

image_pdfPRINT
முள்ளிவாய்க்கால் டயரி
மே-02
“இன்று காலை ,அப்பாவிப் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில் வைத்தியசாலையை நோக்கியும்,சுற்றுப்புறமாக ஷெல் தாக்குதல்கள் மீண்டும் தொடர்ந்து இடம்பெற்றன.
30 முதல் 40 இறந்த உடலங்களைக் வெளியே கண்டடேன். செல் குண்டுகளின்  புகை காற்றுடன் கலந்து வாந்தியை வரவைத்ததுடன் இரத்த வெள்ளத்தில் இருந்த காயப்பட்டவர்கள் கத்தி அழுதுகொண்டிருந்தார்கள்.” இவ்வாறு சாட்சியாளர் ஒருவர் கூறியிருந்தார்.
– ஜ.நா.போர்க்குற்ற அறிக்கை,பந்தி 870 

மோசடி குற்றச்சாட்டில் சிறையிலிருந்த ஐவருக்கு பிணை

image_pdfPRINT
வங்கிகளின் ஏ ரி எம் இயந்திரங்களில் மீள்நிரப்ப எடுத்து வரப்பட்ட பணத்தில் 80 இலட்சம் ரூபா  மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்ற தடுப்புக் காவலில் இருந்த 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. எனினும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எவரும் கடந்த 2 தவணைகளாக மன்றில் முன்னிலையாகி விசாரணை தொடர்பான அறிவிப்பை வெளிப்படுத்தவில்லை. அவர்களின் அசமந்த செயற்பாட்டை கண்டித்த நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபர்கள் ஐவருக்கும் பிணை வழங்கி கட்டளை வழங்கினார்.
அனுராதபுரம் பகுதியில் இயங்குகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வங்கிகளின்  ஏ.ரி.எம் நிலையங்களுக்கு பணத்தை விநியோகம் செய்யும் பணியை முன்னெடுத்து  வருகின்றது.
கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி அனுராதபுரத்திலிருந்து 11 கோடியே 74 இலட்சம் ரூபா பணத்தை 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் அந்த நிறுவனம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தது.
யாழ்ப்பாணம் வந்து பணத்தை சரி பார்த்தபோது, அதில் 80 இலட்சம் ரூபா பணம் குறைவடைந்து காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்தப் பணத்தை எடுத்து வந்த வாகனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.
அவர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியால் பிணை விண்ணப்பம் செய்தார்.
“இந்த வழக்கு விசாரணைகள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எவரும் இரண்டு தவணைகளாக மன்றில் தோன்றவில்லை. எனவே இந்த வழக்கில் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. அதனால் சந்தேகநபர்களை பிணையில் செல்ல அனுமதிக்கவேண்டும்” என சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.
“குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டது. பல தடவைகள் நினைவூட்டப்பட்டது” என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
“பொதுச் சொத்துக்கள் மோசடிச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக் கூடாது. விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில் அவர்கள் பிணையில் சென்றால் பாதிப்பு ஏற்படும்” என்று பாதுகாப்பு சேவை நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.
இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபர்கள் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள் 5 பேரும் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணையை மன்றில் முற்படுத்தவேண்டும். அவர்களின் வதிவிட முகவரியை கிராம அலுவலர் உறுதிப்படுத்தவேண்டும்” என்ற நிபந்தனையை மன்று விதித்தது.

எச்சரித்த டக்ளஸ் தேவானந்தா; ஏவி விட்ட சுவிஸ் ஆன்ரி- விசரணையில் திடுக்கிடும் தகவல்

image_pdfPRINT
நடன ஆசிரியையின் சகோதரியின் குடும்ப விடயங்களில் தலையிடக்கூடாது என ஈ.பி.டி.பி உறுப்பினர் இருவரை எச்சரித்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இனி எந்த பிரச்சினையும் இடம்பெறாது என உறுதியளித்திருந்தார் என்ற அதிர்ச்சியளிக்கும் விடயம் பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள நடன ஆசிரியை ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாள் வெட்டு கும்பல் ஒன்று நடன ஆசிரியை மீதும் அவரது தாயார் மீதும் தாக்குதல் நடத்தினர்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணையிலேயே மேற்படி திடுக்கிடும் தகவல்கள்  வெளியாகியுள்ளன.
வாள்வெட்டு கும்பலின் இலக்கு ஆசிரியையின் சகோதரி மீதானதே. குறித்த நேரத்தில் அவர் வீட்டினுள் ஒளிந்துக்கொண்டதானலேயே ஆசிரியை மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
ஆசிரியையின் சகோதரியின் கணவரது முதலாவது மனைவி சுவிஸில் வசிக்கிறார். அவரது ஏற்பாட்டிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் ஆரம்ப விசாரணையின் பின் தெரிவித்தனர்.
இதேவேளை இவ் விசாரணையில் புதிய தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது. குறித்த ஆசிரியையின் வீடிற்கு இரண்டு மதங்களிற்கு முன்னர் தம்மை ஈ.பி.டி.பி உறுப்பினர் என சொல்லிக்கொண்டு இருவர் சென்றுள்ளார்.
அவர்கள் தாம் வெளிநாட்டு ஆன்ரி  சொல்லியே வந்தோம் என அச்சுறுத்தும் பணியில் செயல்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட இதனை அறிந்த அயலவர் ஒன்றுகூடி அதில் ஒருவரை மடக்கி பிடித்து சுன்னாக பொலிஸில் ஒப்படைத்தனர்.
பின்னர் ஆசிரியையின் வீட்டுக்காரர்கள் இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்றது, குறித்த முறைப்பாடு தொடர்பில் சம்மந்தப்பட்ட உறுப்பினர் இருவரையும் அழைத்து இனிமேல் அந்த  குடும்பத்துடன் எந்த பிரச்சினைக்கும் போகக்கூடாது என எச்சரித்து அனுப்பியிருந்தார் என பொலிஸ் தவல்கள் தெரிவிக்கின்றன.

பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள கூட்டமைப்பு தமிழ்த் தேசிய நீக்கம் செய்துவருகிறது

image_pdfPRINT

மேதினக் கூட்ட உரையில் கஜேந்திரகுமார்

உள்ளூராட்சி சபைகளில் பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய நீக்கம் செய்துவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் .
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினக் கூட்டம் நல்லூர் கிட்டுபூங்காவில் இன்று  (01)  நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
“தமிழ்த் தேசயத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு சில முக்கியமான பொறுப்புக்கள் உள்ளன. அந்த முக்கியமான அடிப்படை விடயங்களில் எமது அமைப்பு தீவிரமாக இயங்கிவருகின்றது. மக்களது அன்றாட பிரச்சனைகளை எமது உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஊடகவும் உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்பாளர்களாக நியமிக்கப்பட்ட ஏனயை உறுப்பினர்கள் ஊடாகவும் வெளிக்கொணர்ந்து தீர்வு காணும் வகையில் எமது செயற்பாடுகள் அமையும்.
அதேபோல தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய மான விடயங்கள் இருக்கின்றன. எமது அமைப்பின் தலைமைப்பீடம் அந்த முக்கியமான கொள்கை விடயங்களில் மிகவும் தீவிரமாக இயங்கிவருகின்றது. முதலாவது எமது இனப்பிரச்சனைக்கான தீர்வு.
அந்த விடயம் தொடர்பாக – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளும் தமிழ்த் தேசிய நீக்கத்தைச் செய்ய முடிவெடுத்திருக்கின்றார்கள். தமிழ்த் தேசிய அரசியலில் இருந்த தமிழ்த் தேசிய நீக்கம் செய்தால் மட்டுமே நாங்கள் கடந்த 70 வருடங்களாக நிராகரித்துவந்த நாங்களாகவே விரும்பி ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு கொண்டுசெல்லப்படுவோம் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டிவந்துள்ளோம்.
அந்தச் செயற்பாடுகள் போர் முடிந்த கையோடே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. தமிழ்த் தேசிய வாதத்தைப் பொறுத்தவரை எமக்கு மிக முக்கியமான அடையாளங்கள் உள்ளன. தமிழ்த் தேசிய பரம்பரையில் வளர்ந்துவந்த கட்சிகள். சிங்கக் கொடியை ஏற்றுக்கொண்டதில்லை. இரண்டாவது ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை தமிழர்களிற்கு எதிரான அடக்குமுறை தினமான பார்க்கின்ற விடயம்.
 
மூன்றாவது தெற்கை மையப்படுத்தி செயற்படுகின்ற பேரினவாத கட்சிகளை நிராகரிக்கிறது. எமது மண்ணில் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கக்கூடாது எனச் செயற்படுவது.
இந்த மூன்று விடையங்களும் மிக முக்கியமான விடையங்கள். ஆனால் தமிழ் அரசியலில் இருந்து தமிழ்த் தேசிய நீக்கம் செய்வதாக இருந்தால் மக்கள் இந்த மூன்று விடயங்களையும் மறந்துவிட வேண்டும். அந்தவகையில்தான் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டதாகக் கூறிவந்த கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின் ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்றது.
தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து தமிழ்த் தேசிய நீக்கம் செய்யவேண்டுமாக இருந்தால் இவ்வளவு காலமுமாகப் பார்க்கப்பட்ட சம்பவங்கள் எமது மனங்களில் இருந்து அகற்றப்படவேண்டும். அவை பிழையானவையாக நாங்கள் கருதாமல் நாங்கள் முழுமையாக நம்பி ஏற்றுக் கொள்கின்ற நிலைக்கு மக்களைக் கொண்டுவர வேண்டும். அதற்காக முன்னெடுக்கப்பட்ட விடயங்களே இவை.
இவற்றைத்தான் நாங்கள் எமது மக்களிடம் சுட்டிக்காட்டி வருகின்றோம்” – என மேலும் தெரிவித்தார்.

வாள்வெட்டுக் கும்பல் சந்தேக நபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்

image_pdfPRINT
“வாள்வெட்டுக் கும்பலில் தொடர்புபடாத 17 வயது இளைஞனை சந்தேகநபராகக் கைது செய்து பொலிஸார் விளக்கமறியலில் வைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தின் இளைய தலைமுறையினரின் வாழ்வைப் பாழாக்கும் வகையில் பொலிஸாரின் செயற்பாடுகள் அமைகின்றன. பொலிஸாரின் இத்தகைய செயற்பாடுகளை நீதிமன்றம் தலையிட்டே -அதில் சிறப்புக் கவனம் செலுத்தி தடுத்து நிறுத்தவேண்டும்”
இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார் மூத்த சட்டத்தரணி வி.ரி.சிவலிங்கம்.
“சட்டத்தரணிகளால் முன்வைக்கப்படும் சமர்ப்பணங்களை இந்த மன்று கவனத்தில் எடுத்து, பலரை விடுவித்தது. அதனால் எல்லோருமே அப்பாவிகள் என்று எடுத்துக்கொள்ள முடியாது.  நவீன தொழிநுட்ப யுகத்தில் சிசிரிவி கமரா பதிவுகள் மூலம் பலரின் குற்றங்கள் நிரூபிக்கப்படுகின்றன. சிசிரிவி காணொலிப் பதிவுகளைப் பார்க்கின்ற போது, பல இளைஞர் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது வெளிப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் உள்ள ஹாட்வெயார் ஒன்றின் மீது கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி பிற்பகல் அடாவடிக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியிருந்தது.
தாக்குதலையடுத்து 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஏனைய நான்கு பேரும் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொக்குவில் சந்தியில் நண்பனின் பிறந்த நாளைக் கேக் வெடிக் கொண்டாடிய போது ஏற்பட்ட தகராறை அடுத்தே ஹாட்வெயார் மீது தாக்குதல் நடத்திடனோம்  என சந்தேகநபர்கள் தெரிவித்தாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.
சந்தேகநபர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர்.
2ஆவது சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி வி.ரி.சிவலிங்கம் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.
“எனது கட்சிக்காரர் 17 வயதுடைய இளைஞன். அவருக்கும் இந்த வன்முறைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. பொலிஸார் எனது கட்சிக்காரர் மீது பொலிஸார் வேண்டும் என்றே
குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
முதலாவது சந்தேகநபர் யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியில் பயின்று சாதாரண தரத்தில் 8ஏபி பெறுபேற்றைப் பெற்றவர்.
யாழ்ப்பாணத்தில் இளைய தலைமுறையினரின் வாழ்வைப் பாழாக்கும் வகையில் பொலிஸார் செயற்படுகின்றனர். இவ்வாறான செயற்பாட்டை தடுக்க நீதிமன்றம் கவனம் செலுத்தவேண்டும்.
எனவே 2ஆவது சந்தேகநபரை பிணையில் விடுவிக்க மன்றைக் கோருகின்றேன்” என்று மூத்த சட்டத்தரணி வி.ரி.சிவலிங்கம் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.
“வன்முறைகளில் சம்பந்தப்படாதவர்கள் சிலரை சந்தேகநபர்கள் என்றுகூறி பொலிஸார் கைது செய்கின்ற போது, நீதிமன்றம் அவ்வாறானவர்களை விடுவிக்கின்றது. ஆனால் அனைவரையும் தப்புச் செய்யாதவர்கள் – அப்பாவிகள் என்று எடுத்துக்கொள்ள முடியாது.
நவீன தொழிநுட்பங்கள் வந்த பின்னர், வன்முறைகளில் ஈடுபடுபவர்களை இலகுவாக இனங்காண முடிகின்றது. சிசிரிவி காணொலிப் பதிவுகளைப் பார்க்கின்ற போது, இளைஞர்கள் எவ்வாறு ஆக்கிரோசமாக செயற்படுகின்றனர் என்பது அறிய முடிகின்றது.
பொது இடத்தில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடவேண்டும் இல்லை. எத்தனையோ மண்டபங்கள் உள்ளன – வீடுகள் உள்ளன. இவர்கள் வீதியில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்” என்று நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் சுட்டிக்காட்டினார்.
“அடுத்த தவணையின் போது சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை பொலிஸார் தாக்கல் செய்யவேண்டும். சந்தேகநபர்கள் 4 பேரின் விளக்கமறியல் வரும் 15ஆம் திகதிவரை நீடிக்கப்படுகிறது” என்று மன்று கட்டளையிட்டது

வட மாகாண சபை தேர்தல் நவம்பரில்!

image_pdfPRINT
வடக்கு மாகாண சபை தேர்தல் நவம்பரில் நடக்கும் சாத்தியமுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இதேவேளை உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடைந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடையவுள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை இந்த வருட இறுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆறு மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நிர்வாக காலம் முடிவடைந்துள்ள , சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கும், இந்த வருடம் செப்டெம்பர் மாதம் நிர்வாக காலம் முடிவடையவுள்ள, மத்தி, வடக்கு மற்றும் வட மேற்கு ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கும் இந்த வருட இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் முறைமையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, இந்த தேர்தலை பழைய விகிதாசார முறைமையில் நடத்துவதற்கு அரசியற் கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அறிவிப்பை மீறி யாழில் உழைப்பாளர் தினம்

image_pdfPRINT
இலங்கை அரசாங்கத்தினால் மே தினம் எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் யாழில் மே தின கூட்டங்கள் உலக உழைப்பாளர் தினமான இன்றைய தினம் (1) எழுச்சிபூர்வமாக நடைபெற்றன.
அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டம் வடமராட்சி மாலை சந்தி மைக்கல் விளையாட்டரங்கிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின கூட்டம் நல்லூர் சங்கிலியன் பூங்காவிலும் நடைபெற்றன.
வெசாக் வாரத்தில் மே தினம் வந்தமையில் , மகாநயக்க தேரர்கள் மே தினத்தை பிற்போடுமாறு அரசாங்கத்தை கோரியதனை அடுத்து இலங்கையில் மே தினம் எதிர்வரும் 07 ஆம் திகதி என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் மே தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வழங்கப்பட்ட விடுமுறை இரத்து செய்யப்பட்டு , 7ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தூக்கத்திலேயே கொல்லப்பட்ட பெரும் சோகம்

image_pdfPRINT
முள்ளிவாய்க்கால் டயரி
மே-01
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (மே-1) முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை மீது இலங்கை இராணுவத்தினர் மீண்டும் செல் தாக்குதல்.
காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருத்த பலர்  தூக்கத்திலேயே கொல்லப்பட்டனர்.

ஆழக்கடலெங்கும்…/கரும்புலிகள் என நாங்கள்; வல்வையில் தவில் நாதஸ்வர கச்சேரி முழக்கம்

image_pdfPRINT
வல்வை முத்துமாரி அம்மன் ஆலய நாதஸ்வர கச்சேரியில் ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சிபாடல் கோவிலில் திண்டிருந்த மக்களை மகிழ்ச்சியால் நெகிழ வைத்துள்ள அதே வேளை  சமூக ஊடகங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வேட்டைத்திருவிழாவான நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தவில் நாதஸ்வர கச்சேரியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சிபாடல்களிலிருந்து “ஆழக்கடலெங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று/ தமிழீழ கடலெங்கும் எங்கள் கரிகாலன்” எனும் பாடலும் கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம் / கண்டது சிங்களம் கலங்கிட வெல்வோம் ” எனும் பாடலும் இசைக்கப்பட்டன.
நாதஸ்வர தவலில் தோய்ந்து காற்றில் கலந்து  அங்கிருந்த பெரும் திரளான மக்களை மகிழ்ச்சியால் நெகிழவைத்த குறித்த இரு பாடல்களையும் நீங்களும் கேட்க கிழே உள்ள இரு ‘லிங்’ குகளை அழுத்துங்கள்.

பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சராக சஜித் ஜாவித்

image_pdfPRINT

பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சரா (Home Secretary) பாகிஸ்தான் வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் ஜாவித் (Sajid Javid) பிரித்தானியப் பிரதமர் தெரசா மே நியமித்துள்ளார்.

விரைவில் அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் முழுவதும் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன் தீவுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு அங்கேயே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது.

சமீபத்தில் கரீபியன் தீவுகளில் இருந்து வந்து குடியேறியவர்களில் பலருக்கு பிரிட்டனில் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சில திட்டங்கள் மறுக்கப்பட்டது. பிரிட்டனில் வாழ்வதற்கு உரிய ஆவணங்களை அவர்கள் வைத்திருக்காவிடில் மீண்டும் நாடுகடத்தப்படுவார் என அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.

நீண்ட நாள் பிரிட்டன் வாசிகளை சட்டவிரோத குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனை அடுத்து, உள்துறை மந்திரி ஆம்பர் ரூத் (Amber Rudd) பதவி விலக வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் ஆம்பர் ரூத்துக்கு எதிராக ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாகவும் அதற்கான ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கும் அனுப்பி வைத்தார். இதனையடுத்து ஆமபர் ரூத்தின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்து.

இதனையடுத்தே  சஜித் ஜாவித்தை பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சராக பிரித்தானியப் பிரதமர் தெரசா மே நியமித்துள்ளார்.

பட்டப்பகலில் ஆசிரியை மீது வாள் வெட்டு; கொக்குவிலில் சம்பவம்

image_pdfPRINT
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள பட்டப்பகலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டியுள்ளனர்.
அதிர்ச்சியளிக்கும் இச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று (29) பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிள்களில் வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்கல், ஆசிரியையின் கூந்தலை பிடித்து வெட்டி கொடுமைப்படுத்தியதுடன், அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். இவ்வேளையில் அதனைத் தடுக்கச் சென்ற ஆசிரியையின் தாயாரையும் குறித்த கும்பல் வாளால் வெட்டிக்காயப்படுத்தியதுவிட்டு தப்பிச் சென்றது.
பின்னர் இரத்த வெள்ளத்திலிருந்து இருவரும் அயலவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த நடன ஆசிரியை கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட தருமபுரம் பாடசாலையில் பணியாற்றி வருகிறார். பாடசாலை விடுமுறை நாளான இன்று வாள்வெட்டுக் கும்பல் பட்டப்பகலில் வீடு புகுந்து இந்த அட்டூழியத்தை செய்துள்ளது.
இதே வேளை, CCTV கமரா வில் குறித்த வாள் வெட்டு கும்பல் பதிவாகியுள்ளதால் அதன் உதவியுடன் வாள்வெட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்களை  பொலிசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சாவகச்சேரி மற்றும் கொக்குவில் இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரைக்கு எவரையும் கைது செய்யாததால் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலையங்களின் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுப்புகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என கடந்த வெள்ளிக்கிழமை (27) வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாந்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!