
மாவீரர் நாள் மற்றும் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு, தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரி பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு இன்று மனு ஒன்று கையளிக்கப்பட்டது . இந்த மனு தமிழினப்படுகொலையை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கவும், போர்க்குற்றவாளிகளுக்கு தடைகள் விதிக்கவும், நீதி நிலைநிறுத்துவதற்கான திடமான நடவடிக்கைகள் எடுக்கவும் பிரித்தானியாவை வலியுறுத்துகிறது.
இந்த மனு சமர்ப்பிப்பு நிகழ்ச்சி, இனப்படுகொலைத் தடுப்பு மற்றும் தண்டிப்புக்கான சர்வதேச மையம் (ICPPG) இனால் ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை இராணுவம் மேற்கொண்ட திட்டமிட்ட சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளில் உயிர்தப்பியவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், மற்றும் ICPPG யின் தொண்டர்கள்ள ஆகியோர் இந்த மனுவில் கையொப்பமிட்டிருந்தனர்.
இந்த மனுவை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ICPPG ன் செயற்பாட்டாளர்களான மதுசங்கர் கெங்கேஸ்வரன், ஆரங்கன் ஜெயக்குமார், விதுஷன் மார்க்கண்டு, அபினாஷ் திலீபன், கஜானந்த் சுந்தரலிங்கம் மற்றும் லோகதர்ஷி சூரியகாந்த் ஆகியோர் கையளித்தனர்.

மனுவின் முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:
- தமிழ் மக்களின் மீது நடைபெற்ற இனப்படுகொலையை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பரிந்துரைத்தல் அல்லது ஒரு சிறப்பு தீர்ப்பாயத்தை (Special Tribunal) நிறுவுதல் உள்ளிட்ட சர்வதேச மற்றும் சுயாதீன நீதி வழிமுறைகளை ஆதரிக்கவேண்டும் .
- தமிழர்களின் சுயாதீனம் , சமத்துவம் மற்றும் பாதுகாப்பு உரிமைகளை மதிக்கும் வகையில், சர்வதேச கண்காணிப்பில் உள்ள அரசியல் தீர்வை உறுதி செய்ய பிரித்தானியா வலியுறுத்த வேண்டும்.
- இந்த அநீதிகளை இலங்கை அரசு ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்க ஏதுவான அரசியல் அமைப்பு சூழலை உருவாக்கியதில் பிரித்தானியாவின் வரலாற்றுப் பங்கு இருப்பதைக் கவனத்தில் கொண்டு, அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ITJP, Sri Lanka Campaign for Peace and Justice, Redress ஆகிய சர்வதேச அமைப்புக்கள், British Tamil Conservative (BTC), Tamils For Labour (TFL) மற்றும் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து பல வருடங்களாக ICPPG மேற்கொண்ட கடும் முயற்சியின் விளைவாக அண்மையில் பிரித்தானிய அரசாங்கம் சில இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு விதித்துள்ள தடைகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளதுன், பல முக்கிய போர்க் குற்றவாளிகளுக்கு இன்னும் தடை விதிக்கப்பட வேண்யிருப்பதை வலியுறுத்தி, உடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இவ் மனுவில் கோரப்பட்டுள்ளது .



