இலங்கையை நெருங்கி வந்துள்ள ஆபத்து: சர்வதேச சட்ட அதிகாரம் பாயும் முனைப்பில்
இலங்கையில் தற்போது அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து அதிர்ப்த்தி வெளியிட்டுள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹ_சேன், அங்கு பொறுப்புக் கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில் சர்வதேச சட்ட அதிகாரத்தை பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறைகளையடுத்து நாடளாவரீதியில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்துள்ளமை குறித்து நான் மிகவும் அதிர்ப்தி அடைந்துள்ளேன்.
இலங்கை அரசு நிலைமாறு கால நீதி நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரத்தமுள்ள முன்னேற்றங்கள் இலங்கையில் இல்லாமை குறித்து நான் கவலையடைகிறேன். பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகால நீதியின் முன்னேற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் அவசியமானது.
இதில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில் சர்வதேச சட்ட அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளை ஊக்குவிக்கவுள்ளேன். இது தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முழுமையான விளக்கம் அளிக்கவுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி 9 ஆவது நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப் பயணம்
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐ.நா. நோக்கி விரையும் ஈருருளிப் பயணம் இன்று 9 ஆவது நாளா. (08.03.2018) கொல்மார் மாநகரத்திலிருந்து சுவிஸ் நாட்டைச் சென்றடையவுள்ளது.
ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் தமிழின அழிப்புக்கு நீதிகோரி திரளவுள்ள ஐ.நா. நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும், ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி
ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலிலிருந்து ஆரம்பமான ஐ.நா. நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் 9 ஆவது நாளான இன்றைய தினமும் கடும் குளிரிலும் தொடர்கிறது.
8 ஆவது நாளான நேற்றய தினம் ஸ்ரார்ஸ்பூர்க் மாநகரிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கான ஆலோசனை அவையின் முன்பாக தமது மனித நேயப் பயணத்தை தொடங்கிய குழுவினர் அங்கிருந்து 40 கிலோமீற்றர்கள் கடந்து, அல்சாசு மாநிலத்தின் இதயம் என்று வர்ணிக்கப்படுகின்ற செலசுதா நகரம் சென்றடைந்தனர்.
அங்கு அவர்களை வரவேற்ற அந்நகர முதல்வர், நீண்ட பயணத்திற்கான சக்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறி அவர்களுக்கு
சிற்றுண்டி, பழரசம் என்பவற்றைப் பரிமாறியிரந்தார். தமிழ் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு தம்முடைய ஆதரவினைத் தெரிவித்து, பயணத்தில் பங்குபற்றியோருக்கு அந்த நகரத்தின் வரலாறு சார்ந்த நூலைப் பரிசளித்தார்.
இதனைத்தொடர்ந்தும் 30 கிலோமீற்றர்கள் கடந்து கொல்மார் என்ற இடத்தைச் சென்றடைந்தனர். அங்கு அவர்களை வரவேற்ற முதல்வர் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளுக்கான ஆலோசனை அவையில் தமிழ்மக்களுக்கான நீதிக்காக பிரான்சு குரல் கொடுக்க வலியுறுத்தி தமது மாநகர அவை சார்பில் முறையிடுவதாக உறுதி கூறினார்.
இந்நிலையிலேயே இன்று கொல்மார் மாநகரத்திலிருந்து தொடர்ந்து பயணிக்கவுள்ள ஈருருளிப்பயணம் மதியம் 13.30 க்கு முலூசு நகரைச் சென்றடையவுள்ளது. முலூசு மாநகர முதல்வரின் சந்திப்பிற்கு பின் 17.00 மணிக்கு சந் லூயி நகர அவையைக் கடந்து 18.00 மணிக்கு சுவிசு நாட்டைச் சென்றடையவுள்ளது.
நாடு பூரா சமூக ஊடகங்கள் முடக்கம்
இலங்கை முழுவதும் கைதொலைபேசி வழியிலான இணைய சேவை முற்று முழுதாக தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிகவும் பதற்றகரமான சூழலினைத் தொடர்ந்து பிறப்பிக்கப்படுள்ள ஊரடங்கினையும் மீறி ஆங்கங்கே கலவரங்கள் நடைபெற்று வருவதற்கு சமூக வலைத்தளங்களில் பரவிவரும் வீடியோக்கள் புகைப்படங்களே காரணம் என்ற அடிப்படையில் இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தலை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
புலிகளின் மிதி வெடிகளைப் பார்த்து வியந்த ஐ.நா.வின் ஹுசைன்
தமிழீழ விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட மிதிவெடிகளைப் பார்த்து வியந்த ஐ.நா.வின் சிறப்பு துவர் இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசைன் அவைகள் தொடர்பிலான விளக்கங்களையும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார்.
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கண்ணி வெடிகளை தடைசெய்யும் பிரகடணத்தின் ஐ.நா.சிறப்பு தூதுவர்
இளவரசர் ஹுசைன், நேற்றயதினம் வடக்கிற்கு பயணம் மேற்கொண்டு கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டதுடன் பலதரப்பினருடன் சந்திப்புக்களையும் மேற்கொண்டார்.
இதன்போது கண்ணிவெடியகற்றும் பணிகள் இடம்பெற்றுவரும் முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளுக்கு நேரில் சென்ற ஹுசைன் அங்கு மீட்கப்பட்டதாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒருதொகை வெடிபொருட்களை பார்வையிட்டார்.
இதில் புலிகளால் தயாரிக்கப்பட்ட மிதிவெடிகள் என காட்சிப்படுத்தப்பட்டவற்றை பார்த்து பியந்த இளவரசர் ஹுசைன், அவைகள் தொர்பில் அருகில் நின்றிருந்த அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் இராணுவ அதிகாரிகள் கண்ணிவெடி அகற்றும் பணியாளர் ஆகியியோரிடம் விளக்கங்களை கேட்டறிந்துகொண்டார்.
நாடு முழுவதும் அவசரகால சட்டம் !
இனவாத மோதல்களைத் தொடர்ந்து இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு நாடுமுழுவதும் அவசரகால சட்டம் பிரகடணப்படுத்தவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இதனை அவர் தெரிவித்தார்.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டி -திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் சிங்கள- முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினைத் தொடர்ந்து நேற்றைய தினம் கண்டி நிர்வாக எல்லைக்குள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்டி திகன கலவரத்தில் தீயில் சிக்கி இளைஞன் பலி
கண்டி திகன பகுதியில் நேற்று முழுவதும் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதலில் எரிக்கப்பட்ட வீடு ஒன்றினுள் சிக்குண்ட முஸ்லிம் இளைஞன் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்றய கலவரத்தில் முஸ்லிம்களின் வீடுகள் பள்ளிகள் எரிக்கப்பட்டு தாக்கப்பட்ட நேரத்தில் தன் தாய், தந்தை மற்றும் சகோதரனை காப்பாற்றி விட்டு தன்னால் தப்பிக்க முடியாத நிலையில் வீட்டுக்குள் சிக்கிய நிலையினிலேயே அவ் இளைஞன் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
ஆவிகளா கொலை செய்கின்றன; யாழ்., முல்லை மக்கள் அச்சம்
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மர்ம நோயினால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இவர்கள் எந்த நோயினால் உயிரிழந்தார்கள் என வைத்தியர்களால் கூற முடியவில்லை.
எனினும் யாழில் உயிரிழந்த நான்கு குடும்பத்தைச் சேந்த 9 பேரின் ஆவிகளே இவர்களை கொலை செய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மேற்படி நபர்கள் ஒரு வகை வைரஸ் நோயினால் தான் உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் இதுதொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
எனினும் பிரதேச மக்கள் ஆவிகளின் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மர்ம நோயினால் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த வருடம் இறுதி நான்கு மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பேரும் யாழ்பாணத்தில் 12 பேரும் மர்ம நோயால் உயிரிழந்துள்ளனர்.
இதுவைரை கண்டறியாத காய்ச்சலினால் இவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிரிழந்த அனைவரும் ஆவிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டியில் பதற்றம்; நிர்வாக மட்டத்தில் ஊரடங்கு
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தொடர்ச்சியாய் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் இறந்ததினைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலையியடுத்து கண்டி நிர்வாக மட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் எதிரொலியாக நேற்றய தினம் இரு கடைகள் எரிக்கப்பட்டு கலவரங்கள் நடைபெற்ற அதேவேளை இன்று அவ் இளைஞனின் இறுதி ஊர்வலமும் நடைபெறவுள்ளதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்கே இவ் உத்தரவு போடப்பட்டுள்ளது.
தெல்தெனிய திகன கலவரத்துக்கான காரணம் வெளியானது
தெல்தெனிய திகன நிகழ்வுகளின் பின்னணி தற்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
இது வரை கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி மரணமடைந்த அந்த சிங்கள இளைஞன் ஒரு லொரி சாரதி.
சம்பவ தினம் நள்ளிரவு வேளை அம்பாறை நோக்கி செல்வதற்கு லொரியை எடுத்த போது, பின்னால் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பக்கக் கண்ணாடியில் சிறிது மோதி அது சேதமடைந்து விட்டதாகவும், அம்முச்சக்கர வண்டியில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் கண்ணாடியை உடனடியாக வாங்கித் தருமாறு கேட்டு அடம்பிடித்ததாகவும்,
“இந்த நள்ளிரவில் எங்கும் போய் வாங்க முடியாது. நான் இப்போது அம்பாறை செல்ல வேண்டியிருக்கிறது. எனவே இப்பணத்தை வைத்து நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்” என 1000 ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு அவ்விளைஞன் அவ்விடத்திலிருந்து லொரியுடன் நகர்ந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் இவர்கள் லொரியை பின்தொடர்ந்து சென்று பெற்றோல் நிரப்பும் நிலையமொன்றில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் குறித்த சாரதியான இளைஞனை தாக்கியதாகவும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு வாரத்தின் பின் நேற்று முன்தினம்(3) அவர் மரணமடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை எம்மிடம் ஒப்படைக்குமாறு சிலர் ஆர்ப்பாட்டம் செய்வதாலும் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
யாழில் நீதிமன்ற வழக்கை நிறுத்திய குரங்குகள்
யாழ்ப்பாணத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக நீதிமன்ற செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது குரங்கு கூட்டம் ஒன்று நீதிமன்ற வழக்கை நிறுத்தியுள்ளது.
நீதிமன்ற கூரையின் மீது குரங்குகள் ஏரி கூச்சலிட்டமையினால் வழக்கு விசாரணைகள் நிறுத்தப்பட்டு, குரங்குகளை துரத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாண நகரில் குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளமையால், அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.
குரங்கு கூட்டங்களினால் அதிகமாக பாதிக்கப்படுவது யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் அதற்கு அருகில் உள்ள அரசாங்க அலுவலகங்களாகும். இதன் காரணமாக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்துக்கு மாற்று காணி வழங்குவது தொர்டர்பில் ஆராய்வு
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள காணிகள் விடுவிப்பதற்கு இராணுவம் மாற்று காணி கோரியுள்ளதாகவும் அதற்க்கு மாற்றுக்காணி எங்கு வழங்குவது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி சிவமோகன் தலைமையில் புதுக்குடியிருப்பு காணி உரிமையாளர்கள் மற்றும் புதிதாக பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒரு தொகுதியினர் கூடி கலந்துரையாடியுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் நேற்று (02) மாலை மணிக்கு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலய வளாகத்தில் இடம்பெற்றது
இது விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி மக்கள் கடந்த வருடம் பெப்பரவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் ஒருமாத கால போராட்டத்தை தொடர்ந்து மக்களின் காணிகளில் ஒரு தொகுதி காணி விடுவிக்கப்பட்டதோடு மிகுதி காணிகள் இரண்டு கட்டங்களில் 6 மாத காலத்தில் விடுவிப்பதாக இராணுவம் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக எழுத்து மூலமான உறுதிமொழி வழங்கியிருந்தனர்
இருப்பினும் இன்று ஒருவருடமாகியும் இந்த காணிகள் விடுவிக்கவில்லை இந்நிலையில் இராணுவம் தாம் வேறு இடத்துக்கு மாறுவதற்கு காணி கோரியிருப்பதாக அதிகாரிகள் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவித்தனர்
இந்நிலையில் அவர்கள் மீண்டும் மக்கள் மத்தியில் உள்ள ஒரு காணியையே அவர்கள் கோரியுள்ள நிலையில் இந்த காணியை வழங்க முடியாது எனவும் வேறு எங்கு இதை வழங்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது
இருப்பினும் இது தொடர்பில் எங்கு காணி வழங்குவது என்பது தொடர்பான இறுதிமுடிவு இங்கு எட்டப்படவில்லை எனவும் குறித்த விடயம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியவே இந்த கூட்டம் கூட்டப்பட்டதாகவும் இது தொடர்பான இறுதி முடிவு புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே எட்டப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்
இருப்பினும் பலர் இராணுவம் கோரியுள்ள காணி பொருத்தமில்லை என்பதை தெரிவித்ததோடு மக்கள் மத்தியில் உள்ள இராணுவத்தை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்தனர்.
இருப்பினும் இறுதிமுடிவு புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே எடுக்கப்படவுள்ளது.
சிரியா இனப்படுகொலையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்
சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையகத்தின் லிந்துலை பகுதியில் இன்று (03.03.2018) நண்பகல் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
சிரியா நாட்டில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு எதிராகவும், பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படுதை ஐ.நா பார்த்துக் கொண்டிருப்பதை கண்டித்தும் லிந்துலை நாகசேனை நகரப்பகுதியில் இளைஞர், யுவதிகளினால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு அங்கு உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது .
































