Home Blog Page 311

பெண் வேட்பாளரை கடத்தியதாக பரபரப்பு; வவுனிய தவிசாளர் தெரிவில் தள்ளுமுள்ளு

image_pdfPRINT
வவுனியா நகர சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவின் பின்னர் வவுனியா நகரசபை வளாகத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் ஐ.தே.கட்சியின் பெண் வேட்பாளரை கடத்தி சென்று ஆதரவாக வாக்களிக்கச் செய்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் குற்றஞ்சாட்டியதால் சபைக்கு வெளியில் குழப்ப நிலை உருவானது.
வவுனியா நகரசபைக்கு தவிசாளரை தெரிவு செய்யும் நிகழ்வு ​நேற்று (16) நடைபெற்றதன் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இக்குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் அக்குற்றச்சாட்டை முழுமையாக மறுத்ததுடன் அப் பெண் வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக பாதுகாப்பு வழங்கியதாக தெரிவித்தார்.
அதேவேளை, என்னை யாரும் கடத்த வில்லை என்னை வற்புறுத்தவுமில்லை. எனக்கு பாதுகாப்பு வழங்கியதன் காரணமாக நான் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்தேன் என குறித்த பெண் வேட்பாளர் தெரிவித்தார்.

யாழில் 54 வயது முதியவரின் மிரளவைக்கும் சாதனை

image_pdfPRINT
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வேன் ஒன்றை ஒரு கிலோ மீற்றர் தூரம் தனத தலைமுடியினால் கட்டி இழுத்து முதியவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் பறக்கும் கழுகு விளையாட்டுக் கழகத்தின் 43 ஆவது வருட நிறைவை முன்னிட்டும், தமிழ்- சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும் புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலயத்திற்கருகில் கலாசாரப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
இதன் ஒருகட்டமாக சாகச நிகழ்வு புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்திற்கருகில் பலாலி பிரதான வீதியில் மாலை இடம்பெற்றது.
தையிட்டியைச் சொந்தவிடமாகக் கொண்டவரும் தற்போது மட்டுவில் பகுதியில் வசித்து வருபவருமான 54 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவர், வேன் ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட கயிற்றைத் தனது பின்னம் தலைமுடியில் முடிச்சுப் போட்டுத் தொடர்ச்சியாக வேனை ஒரு கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் சாதனை படைத்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வீதிகளை இராணுவத்தினர் திறக்கவில்லை

image_pdfPRINT

வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வீதிகளை இராணுவத்தினர் விடுவிக்காதமையால் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக வலி.வடக்கு மீள் குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் தெரிவிக்கையில் ,

வலி.வடக்கில் கடந்த 27 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 680 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த வாரம் மீள உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
அந்நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆவளை சந்தியில் இருந்து மயிலிட்டி கிராமக்கோட்டடிசந்தி வரையிலான கட்டுவான் வீதிக்கு செல்லும் வீதி இன்னமும் இராணுவ கட்டுப்பாடிற்குள் உள்ளது.
அதனால் அந்த வீதியினை பொதுமக்கள் பாவிக்க முடியாத வகையில் இராணுவத்தினர் வீதிக்கு குறுக்காக உயர் பாதுகாப்பு வலய முள் வேலிகளை அமைத்துள்ளனர்.
அதனால் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் அவற்றுக்கு செல்லும் வீதி இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளமையால் ,மக்கள் தமது காணிகளுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக மேலும் தெரிவித்தார்.

யாழில். கலையகம் திறந்த தொலைக்காட்சி நிறுவனம் மீது சினேகன் மோசடி குற்ற சாட்டு

image_pdfPRINT

தென்னிந்திய கவிஞரும் பாடலாசிரியரும் பிக்பாஸ் பிரபலமுமான கவிஞர் சினேகனை யாழ்ப்பணத்திற்கு அழைத்து ஏமாற்றி விட்டதாக சினேகன் பேசும் ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

யாழில் படமாக்கப்பட்ட ஒரு முழு நீள திரைப்பட வெளியிட்டுக்கு என தென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.
அவ்வாறு அழைக்கப்பட்ட தம்மை வைத்து பல இலட்ச ரூபாய் பணம் மோசடி செய்து உள்ளதாக குறித்த திரைப்பட குழு, அண்மையில் யாழில் தனது கலையகத்தை திறந்த தொலைகாட்சி நிறுவனம் , மற்றும் யாழில்.உள்ள பிரபல ஹோட்டல் ஆகியவற்றின் மீது சினேகன் குற்ற சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அது தொடர்பிலான அவரது உரையாடலின் குறித்த ஒலிப்பதிவில் மேலும் உள்ளதாவது,
எல்லாத்திரும் காரணம் அந்த தொலைக்காட்சி நிறுவனம் தான் என தெரியவந்துள்ளது. ஒன்று மட்டும் உண்மை அந்த தொலைக்காட்சி நிறுவனம், ஹோட்டல்,  திரைப்பட குழு என எல்லோரும் சேர்ந்து எம்மை ஏமாற்றி உள்ளீர்கள். ஒரு மணி நேரத்தில் நல்ல பதில் கிடைக்கணும் இல்லை என்றால் இதனை பிரச்சனையாக்கி தமிழ் நாட்டில் இறங்கியவுடன் ஊடகங்களுக்கு தெரிவிப்பேன். தொலைக்காட்சி நிறுவனம் எங்களை எடுத்த நேர்காணலை ஒளிபரப்பு செய்ய கூடாது.
எங்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி அந்த ஹோட்டல் காரரிடம் நிறைய பணம் வாங்கி உள்ளனர். நீங்கள் எப்படி எங்களை வைத்து ஒப்பந்தம் இன்றி காசு வாங்க முடியும்.  மூவருமாக சேர்ந்து எப்படி எங்களை விற்க முடியும் இதற்கு மூன்று பேரும் பதில் சொல்ல வேண்டும். இல்லை என்றால் இந்தியாவில் வழக்கு தொடர்ந்து இந்திய காசு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு கோருவேன் என கவிஞர் சினேகன் அதில் தெரிவித்துள்ளார்.

யாழில் தேசிய புத்தாண்டு

image_pdfPRINT
தேசிய புத்தாண்டு நிகழ்வு இம்முறை யாழில் இன்று இடம்பெற்றது. தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
யாழ் மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மேற்படி அமைச்சின் அமைச்சர் மணோ கணேசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.
அதேவேளை இந் நிகழ்வில் அரச அதிகாரிகள் தனியார் நிறுவனங்களின் பிரமுகர்கள் பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் நிழ்வில் கலந்து கொண்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.

கிளிநொச்சியை சேர்ந்த குடும்பஸ்தரை காணவில்லை

image_pdfPRINT
கொழும்பில் பணி நிமித்தம் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பஸ்தரை
கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்களால் அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான வேலாயுதம் விக்கினேஸ்வரன் (வயது – 46) என்பவரே காணாமற்போயுள்ளார் என அவரது மனைவி திருமதி வி.விஜயகுமாரி முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் குறித்த குடும்பஸ்தர், புத்தாண்டை முன்னிட்டு வீடு திரும்பவுள்ளதாக கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் தனது மனைவியிடம் தொலைபேசியில் கதைத்துள்ளார்.
அதன்பின்னர் அவர் தொடர்புகொள்ளவில்லை. அவரது அலைபேசியும் செயலிழந்துள்ளது.
இந்நிலையில் கணவர் இரண்டு நாள்களாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளவுமில்லை – வீடு திரும்பவுமில்லை என்ற நிலையில் அவரது மனைவி நேற்று (14) சனிக்கிழமை அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் குறித்த நபர் பணியாற்றும் நிறுவனத்துடன் தொடர்புகொண்ட போது, 11ஆம் திகதியுடன் அவர் பணிக்கு வரவில்லை என பதில் வழங்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.
முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தரும் விக்கியும் மனம் விட்டு பேசவேண்டும்

image_pdfPRINT

நல்லாட்சி அரசில் புத்தருமில்லை காந்தியுமில்லை-அமைச்சர் மனோகணேசன்

ல்லாட்சி அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து எந்த பயனும் இல்லை ஏனெனில் அரசாங்கத்தில் கௌதம புத்தர்களோ மகாத்மாகாந்திகளோ இல்லை என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

பலமான தமிழ் கட்சி உருவாகுவதை ஐக்கிய தேசிய கட்சி விரும்பவில்லை. 
ஜனாதிபதியின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சை என் அமைச்சின் கீழ் தருவதாக அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருந்தார்.
அப்போது தலையிட்ட அமைச்சர் மங்கள சமரவீர அந்த அமைச்சு துறையை ஐனாதிபதியே வைத்திருப்பது நல்லது என கூறியிருந்தார். மேலும் சர்வதேசத்தின் கவனத்தினை அது கொண்டிருக்கிறது எனவும் கூறினார். பின்னர் நான் அமைச்சர் மங்களவுட ன் பேசும்போது கூறினேன் சர்வதேசத்தின் கவனத்தை கொண்டிருப்பது முக்கியமல்ல. சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என.
அவ்வாறு ஐக்கிய தேசிய கட்சி பலமான ஒரு தமிழ் கட்சி உருவாகுவதை ஜக்கிய தேசிய கட்சி விரும்புவதில்லை. அப்படியே ஒரு பலமான தமிழ் கட்சி உருவானாலும் அந்த கட்சி தமக்கு சாதகமாக இருக்கவேண்டும் என நினைப்பார்கள் என்றார்.
 
சம்பந்தன் – சி.வி. மனம் விட்டு பேசவேண்டும். 
யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரத்தை முன்னர் தபால் கட்டளை பொருளாதாரம் என கூறுவார்கள். ஆனால் இது இன்று உண்டியல் பொருளாதாரமாக மாறியுள்ளது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். அதற்காக இளைஞர்கள் மத்தியில் மனமாற்றம் உண் டாக வேண்டும்.
இங்குள்ள இளைஞர்களுடன் பேசியபோது அவர்களிடத்தில் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மை காணப்படுகின்றது. இந்த நிலையும் ஆபத்தான ஒன்றாகவே உள்ளது. யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரம் மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.
ஆனால் அந்த துறைகள் இந்த மாவட்டத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இந்த மாவட்டத்தில் சொல்லிக் கொள்ளும் அளவில் அபிவிருத்தி பணிகள் இடம்பெறவில்லை.
அபிவிருத்தியும் அரசியல் உரிமையும் நம் இரு கண்கள். அதனை எதற்காகவும் விட் டுக்கொடுக்கவியலாது. தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் மாகாண சபையையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்தார்கள்.
ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இரா.சம்பந்தனும், சீ.வி.விக்னேஷ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் முதலில் மனம் விட்டுப்பேசவேண்டும். இந்த இருவரில் அவர் சரியானவர், இவர் பிழையானவர் என நான் கூறவரவில்லை.
இருவருமே மனம் விட்டுப்பேசி தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படவேண்டும்.  மேலும் தந்தை செல்வா போன்றவர்கள் அகிம்ஷை வழியில் போராடினார்கள் பின்னர்  புலிகள் ஆயுத வழியில் போராடினார்கள் இப்போது சம்மந்தன் சர்வதேச ஆதரவுடன் போராடி வருகிறார்.
அதேசமயம் நான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை சிங்கள மக்களிடம் கொண்டு செல்கிறேன். இந்த அரசாங்கம் புலிகள் இருந்த காலத்தில் ஈழம் தவிர எல்லாம் தருகிறோம் என்றார்கள். இன்று எதுவும் தரமாட்டோம் என்கிறார்கள். ஆகவேதான் நண்பன் ரவிராஜ் வழியில் இதனை நான் செய்கிறேன்.
அரசில் புத்தரும் இல்லை காந்தியும் இல்லை. 
பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு உடன்படிக்கை எதனையாவது செய்துள்ளதா? என எனக்கு தெரியாது. ஆனால் இரு தரப்பிற்கும் இடையில் பேச்சிவார்த்தை நடந்தபோது அங்கு கூறப்பட்ட விடயங்களை நான் பார்த்தேன்.
அதில் புதிதாக ஒன்றையும் கூட்டமைப்பு கூறவில்லை. முன்னரே கூறி வந்த விடயங்களை ஞாபகப்படுத்தியிருந்தார்கள். மேலும் நாங்களும் உடன்படிக்கை எதனையும் செய்யவில்லை. அரசிடனான உடன்படிக்கைகளில் எமக்கு நம்பிக்கையில்லை. இது வரை எத்தனை உடன்படிக்கைகள் செய்யப்பட்டது? அவற்றுக்கு என்ன நடந்தது?
ஆகவே நாம் செய்யும் உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தில் கெளதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை. எல்லாம் அரசியல் பேரம்தான் நடக்கிறது என்றார்.

பொலிசாரிடமிருந்து தப்பிக்க குளத்தினுள் குதித்தவர் உயிரிழப்பு; காப்பாற்றாது விட்டுச்சென்ற பொலிஸார்

image_pdfPRINT

முல்லைத்தீவு மாவட்டத்தில் , போலீசார் விரட்டி சென்ற போது , பொலிசாரிடம் இருந்து தப்பிக்க குளத்தினுள் பாய்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு தெற்கை சேர்ந்த மகேஸ்வரன் ராமகிருஷ்ணன் (வயது 29) எனும் நபரே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,
தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் புத்தாண்டு தினமான இன்றைய தினமும் நாட்டில் உள்ள மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ளன.
அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) மதியம் மூன்று இளைஞர்கள் உடையார்கட்டு பகுதியில் உள்ள குளம் ஒன்றின் அருகில் இருந்து மது அருந்துவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து புதுக்குடியிருப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
போலீசாரை கண்ட இளைஞர்கள் மூவரும் பொலிசாரிடம் இருந்து தப்பி செல்வதற்காக குளத்தினுள் குதித்துள்ளனர். அதன் போது ஒருவர் நீந்தி மறுகரையை அடைந்து தப்பித்துள்ளார். இன்னுமொருவர் நீந்த முடியாது பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். மற்றையவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நீரில் மூழ்கியவர் நீண்ட நேரமாகியும் காணாததால் , போலீசார் தம்மிடம் சரணடைந்த நபரை அவ்விடத்தில் விட்டு விட்டு , நீரில் மூழ்கியவரை மீட்க நடவடிக்கை எடுக்காது அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டனர்.
போலீசார் தம்மிடம் சரணடைந்த நபரை விட்டு சென்ற பின்னர் குறித்த நபர் , ஊரவர்களுக்கு தகவல் வழங்கி ஊரவர்கள் நீரில் மூழ்கிய இளைஞரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மதியம் 2 மணியளவில் நீரில் மூழ்கிய இளைஞரை மாலை 6 மணியளவில் ஊரவர்கள் சடலமாக மீட்டனர். இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவித்த போது , இரவு 8 மணிக்கு பின்னரே போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.
 நீரில் மூழ்கியவரை காப்பாற்றாது போலீசார் விட்டு சென்றமை தொடர்பில் ஊரவர்கள் பொலிசாருடன் கருத்து முரண்பாட்டிலும் ஈடுபட்டனர். 

புதுவருடத்தை ஜனாதிபதியுடன் கொண்டாடி மகிழ்ந்த இரா.சம்பந்தர்; வருடம் பிறந்தும் வீதியில் படுத்துறங்கும் பெற்றோர்

image_pdfPRINT
எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சித்திரைப் புத்தாண்டை ஜனாதிபதி மைத்திரி சிறிபாலசேனாவுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு வைபவத்தில் கலந்து கொண்ட சம்பந்தர் பானையில் பால் பொங்கி வருவதை கண்டு மகிழும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் விடுதலைக்காய் 400 நாட்களை கடந்தும் வீதியில் காத்திருக்கும் பெற்றோர் சித்திரை வருடத்தில் தனித்திருக்க, “ஜனாதிபதி மாமா சொன்னதுபோல் அப்பா சித்திரை வருடமான இன்று வீட்டுக்கு வருவார்” என ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளும்  எதிர்பார்த்திருக்க, தமிழ் மக்களின் வாக்குகளால் அரசியல் பீடத்தில் அமர்ந்திருக்கும் பொறுப்பு வாய்ந்த தலைவரின் இச் செயற்பாடு தமிழ் மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நாளை அப்பாவின் வரவை எதிர்பார்த்துள்ள பிள்ளைகள்; நம்பிக்கையை காப்பாற்றுவாரா ஜனாதிபதி

image_pdfPRINT
தமிழ் புத்தாண்டு நாளை பிறக்கும் நிலையில், அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் விடுவிப்பு பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து எந்தவொரு சாதகமான பதிலும் இன்னும் கிடைக்கவில்லை.
புத்தாண்டுக்கு முன் தந்தை தம்முடன் இணைவார் என்ற ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை  ஜனாதிபதி வீணடிப்பாரா? என்பதுதான் இப்போதைய கேள்வி.
சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் 2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் அவர் மகசின் சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
ஆனந்தசுதாகரின் மனைவி யோகராணி நோய்வாய்ப்பட்டநிலையில் கடந்த மாதம் உயிரிழந்தார். மனைவியின் இறுதிக் கிரியைகளுக்காக ஆனந்தசுதாகர் கிளிநொச்சியிலுள்ள அவரது வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.
மகசின் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட அவர் 3 மணிநேரங்களில் மீள அழைத்துச் செல்லப்பட்டார்.
தனது பிள்ளைகள் குழந்தைகளாக இருந்தவேளை ஆனந்தசுதாகர் அரசியல் கைதியாக தடுப்பில்வைக்கப்பட்டார். அதனால் தந்தையின் அரவணைப்பை நாடிய அவரது மகள் அவரைப் பிரிய விரும்பவில்லை.
அதனால் அந்தச் சிறுமி, தந்தையுடன் சிறைச்சாலைக்குச் செல்ல முற்பட்டாள். அந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை நேரில் கண்டவர்களின் கண்கள் இரண்டிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.
இந்த நிலையில் தாயை இழந்து பெற்றோரின் ஆதரவின்றி தவிக்கும் ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன் மற்றும் மகள் சங்கீதா இருவரும்
தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என ஜனாதிபதியிடம் கருணை மனு முன்வைத்தனர்.
அந்த சிறுவர்களின் ஆதரவுக்காக ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பளிக்கவேண்டும் என  கோரும் பல நூறு மனுக்கள் வடக்கு – கிழக்கிலிருந்து ஜனாதிபதிக்குச் சென்றன.
வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்டவர்களும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினர். அப் பிள்ளைகள் ஜனாதிபதியை சந்திக்க வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில் இளையோர் அமைப்பு ஒன்று முந்திக்கொண்டது. ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்றனர். பிள்ளைகள் இருவரையும் ஜனாதிபதியிடம் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். பிள்ளைகளால் தந்தையின் விடுதலை கோரிய மனுக்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
அவற்றைப் பெற்ற ஜனாதிபதி ஆனந்தசுதாகரின் பொதுமன்னிப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் சொல்லில் நம்பிக்கை கொண்ட பிள்ளைகள், புத்தாண்டுக்கு முன்னர் தந்தை தம்முடன் இணைவார் என காத்திருக்கின்றனர்.
இதனிடையே தனது கடிதத்தையும் ஜனாதிபதி கவனத்தில் எடுத்து, ஆனந்தசுதாகரின் விடுதலை பற்றிய நடவடிக்கையில் இறங்கியுள்ளார் – சிறைச்சாலை ஆணையாளரிடம் விவரங்களைக் கோரியுள்ளார் என்று வடக்கு முதலமைச்சரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் புத்தாண்டு நாளை பிறக்கவுள்ள நிலையில் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கை வீண் போகுமா – வீணடிக்கப்படுமா? என்பதே இன்றைய கேள்வி.
இதற்கான பதில் நாளை தெரியவருமா? ஜனாதிபதியின் கைகளிலேயே பதில் உண்டு.

புலம் பெயர் தமிழரால் நிலை தடுமாறும் இலங்கை இராணுவம்

image_pdfPRINT
கொழும்பு,
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புகள் மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்கள் இலங்கை இராணுவம் குறித்து ஐக்கிய நாடுகள்  சபைக்கு பொய்யான தவல்களை வழங்கி வருகிறார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க புலம்பியுள்ளார்.
இந்த நிலை சரி செய்துகொள்ள சில காலம் எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவ வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் கூறியுள்ளார்.
மேலும் உலக சமாதானத்தை முன்னிட்டு ஐ.நா.வோடு இணைந்து செயற்படுவதே எமது நோக்கமாகும். அந்த வகையில் இவ் வெளிநாட்டு நடவடிக்பை பணிப்பகமானது தற்காலத்தில் காணப்படுகின்ற பல சவால்களுக்கு தீர்வாக அமையும்.
எதிர்காலத்தில் ஐ.நா.அமைதிப்படையில் கடமையாற்றச்செல்லும் படையினருக்கு இப் பணிப்பாளர் சபையினுடாக தேவையான கடமைகள் முன்னெடுக்கப்படும் எனவும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா.அமைதிகாக்கும் படையின் பணிக்காக லெபனான் செல்ல தயாராகவிருந்த போர்க் குற்றவாளியான  இலங்கை இராணு அதிகாரி லெப்டினன் கேர்ணல் வசந்த குமார ஹேவெஜ் க்கு எதிராக புலம் பெயர் தமிழர் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து ஐ.நா.வுக்கு குவிந்த முறைப்பாடுகளையடுத்து அவர் அதிரடியாக ஐ.நா.வால் தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

27 வருடங்களின் பின்னர் சொந்த காணிகளில் 964 குடும்பங்கள்

image_pdfPRINT

யாழ்.வலி,வடக்கில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு இன்றைய தினம் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்பட்டது. 

மயிலிட்டி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் காலை நடைபெற்ற காணி கையளிப்பு நிகழ்வில் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கா கலந்து கொண்டு காணிகளை உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 கிராம சேவையாளர் பிரிவினை சேர்ந்த 964 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!