கொழும்பில் பணி நிமித்தம் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பஸ்தரை
கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்களால் அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான வேலாயுதம் விக்கினேஸ்வரன் (வயது – 46) என்பவரே காணாமற்போயுள்ளார் என அவரது மனைவி திருமதி வி.விஜயகுமாரி முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் குறித்த குடும்பஸ்தர், புத்தாண்டை முன்னிட்டு வீடு திரும்பவுள்ளதாக கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் தனது மனைவியிடம் தொலைபேசியில் கதைத்துள்ளார்.
அதன்பின்னர் அவர் தொடர்புகொள்ளவில்லை. அவரது அலைபேசியும் செயலிழந்துள்ளது.
இந்நிலையில் கணவர் இரண்டு நாள்களாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளவுமில்லை – வீடு திரும்பவுமில்லை என்ற நிலையில் அவரது மனைவி நேற்று (14) சனிக்கிழமை அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் குறித்த நபர் பணியாற்றும் நிறுவனத்துடன் தொடர்புகொண்ட போது, 11ஆம் திகதியுடன் அவர் பணிக்கு வரவில்லை என பதில் வழங்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.
முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.