Home Blog Page 303

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி; ஜனாதிபதியுடன் பேசும் அமைச்சர் விஜயகலா

image_pdfPRINT
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் நினைவுதூபியினை அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து  வலியுறுத்தியுள்ளேன். என  சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்  திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலையே இதனை தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
இறுதி யுத்தத்தின்போது   வன்னியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று  குவிக்கப்பட்டனர்.  உயிரிழந்த இந்த மக்கள் நினைவுகூர முடியாத நிலைமை   பல வருடங்களாக நிலவி வந்தது.  ஆனாலும்  எமது நல்லாட்சி  அரசாங்கம் பதவியேற்றதையடுத்து  2015 ஆம் ஆண்டு மே மாதம் முதல்   முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளை   நினைவேந்தல் செய்யக்கூடிய நிலைமை  ஏற்படுத்தப்பட்டது.
கடந்த மூன்று வருடங்களாக முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுகின்றது. இதேபோன்றே கடந்த வருடம் மாவீரர் தின நிகழ்வுகளும்  வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டது.
இவ்வாறு  எமது அரசாங்கமானது   நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு  அனுமதியினை வழங்கியுள்ளது. நினைவேந்தல் நிகழ்வினை  நடத்துவதில் தவறேதும் இல்லை என்று அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர்  ராஜித சேனாரட்ன பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றார்.
யுத்தத்தில் பொதுமக்களும்  கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அரசாங்கமே  ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது அரசியல், சுயநல பேதங்கள் இன்றி பொதுவான எண்ணத்துடன் நடத்தப்படவேண்டியது இன்றியமையாததாகும்.
உயிரிழந்த உறவுகளை   நினைவுகூரும் நாளில்  அரசியல் பேதங்கள் இன்றி  சகல தரப்பினரும்  ஒன்றிணைந்து  செயற்படுதல் அவசியமானதாகும்.  உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு  முள்ளிவாய்க்காலில் நினைவுதூபி அமைக்கப்படவேண்டியதன் அவசியத்தை கடந்த மூன்று வருடங்களாக  வலியுறுத்தி வருகின்றேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை   கடந்த புதன்கிழமை  சந்தித்து  நினைவுதூபி அமைக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கான கடிதத்தினையும் கையளித்துள்ளேன்.
அதேபோன்றே பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவிடமும்   இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இரணைதீவில் மக்களை குடியேற்றவேண்டியதன் அவசியத்தை  நான்  தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தேன். அதற்கான சந்தர்ப்பம்   தற்போது எட்டியுள்ளது.
அதேபோன்றே நினைவு தூபி அமைக்கும் விடயத்திலும்  தொடர்ச்சியாக அக்கறை  செலுத்துவேன். இந்நாளில்  சகலரும் ஒன்றிணைந்து  உயிரிழந்த உறவுகளை  நினைவுகூருவோம். அரசியல் பேதங்களை மறந்து நாம் அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து  செயற்படவேண்டியது இன்றியமையாதது. என மேலும் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்து எம்மையும் சுயபரிசோதனை செய்து கொள்வோம் –

image_pdfPRINT
-யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன்

முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்து எமது இனத்தின் உரிமைக்காக உயிர்கொடுத்தவர்களை மனதில் நிறுத்தி பிராத்திப்போம். இவ் மண்ணில் கால்பதித்து பிரார்த்திக்கும் அதே நேரம் எம்மையும் மனதால் சுயபரிசோதனை செய்து கொள்வோம். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,
சிங்கள பேரினவாத அரசு தமிழரின் தாற்பரியமான தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை அடக்குவற்கு கையாண்ட இனஅழிப்பு நடவடிக்கையின் உச்சம் தான் முள்ளிவாய்கால் இனவழிப்பு
முள்ளிவாய்கால். தாயகனவுடன் சாவினைத் தழுவிய சந்தன மேனிகளை மடி கிடத்தி அமைதித்துயில் கொள்ள தாலாண்டும் யாக பூமி. தியாக பூமி. தமிழினம் வரலாறாய் நிமிர  உயிர துஞ்சிடா வீரமும் துவளா மனமும் கொண்ட மக்கள் உதிரம் சிந்திய புண்ணிய பூமி.
முள்ளிவாய்கால் பேரவலத்தை சுமந்தவர்கள் அந்த அவலத்தில் இரத்தமும் சதையுமாக துயர் சுமந்த சாட்சிகள் இன்று மௌனமாக அதேசமயம் வெஞ்சினத்துடனும் வேகும் நெஞ்சுடனும் அவதானித் தபடி இருக்கின்றார்கள்.
மாறாக மே 18 2009 இல் தமிழருக்கு முள்ளிவாய்கால் பேரஅவலத்தை தந்த அரசுக்கு வாழ்த்தும் ஆசியும் வழங்கி  தமிழர்களின் கூக்குரலுக்கு செவிசெய்காது மௌன தவம் செய்த பெருந்தகைகளை முள்ளிவாய்கால் பேரவலத்தை சிரமேற்கொண்டு அனுஸ்டிக்கின்றனர்.
வல்லாதிக்க மேலாதிக்க இனவாத சக்திகளுக்கு எடுபிடிகளாக தமிழினத்தின் உரிமைகளையே மெல்ல மெல்ல தாரைவார்க்க துணிந்து செயற்படும் எவரும் அவர்கள் பாதங்களை முள்ளிவாய்கால் மண்ணில் பதிவதால் அந்த மண் அவமதிக்கப்படுவதாகவே கருதுகின்றேன். அதை அந்த புனித மண்ணும் ஏற்றுக்கொள்ளாது என்பது வெளிப்படை.
போர் முடிந்ததாகக் கூறப்படும் காலம் ஒரு தகாப்சத்தை அண்மிக்கும் வேளையில் அன்று முள்ளிவாய்க்காலில் மக்கள் அழிந்து கொண்டிருக்க அரசுக்கு கொடிபிடித்துவிட்டு இன்று நினைவுநாளை அனுஸ்டிக்க அவர்களின் துயரத்தில் பங்குகொள்ள உரிமைகோரி மக்களை ஒற்றுமையாக அணிதிரளச் சொல்லும் சில தமிழ் அரசியல் தலமைகளின் மனங்களை நினைக்கும் போது வியப்பாக உள்ளது.
அவர் வேண்டாம் இவர் வேண்டாம் என்று முள்வாய்க்கால் மண் எவரையும் ஒதுக்கப்போவது இல்லை எல்லோரும் ஒற்றுமையாக எவ்விதபேதமின்றி முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடுவோம். அவ் மண்ணில் கால்பதித்து எமது இனத்தின் உரிமைக்காக உயிர்கொடுத்தவர்களை மனதில் நிறுத்தி பிராத்திப்போம். இவ் மண்ணில் கால்பதித்து பிரார்த்திக்கும் அதே நேரம் எம்மையும் மனதால் சுயபரிசோதனை செய்து கொள்வோம்.
அமுதிலும் இனிய தமிழ் படும் அவலத்தை தமிழர் தாயகம் எதிர்கொள்ளும் அடக்குமுறையை தமிழ்மக்கள் அனுபவிக்கும் அச்சுறுதல்களை எமது தனிநபர் சுயநல அரசியல் அனுகூலங்களை அபிலாசைகளை எட்டுவதற்காக பயன்படுத் தினோமா? நாங்கள் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெறும் போது  மௌனமாக இருந்து விட்டு வாழ்த்துச் செல்லி விட்டு தியாகமும் வீரமும் விதையுண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் புனித பூமியில் கால் பதிக்க எமக்கு எந்த வகையிலும் அருகதை யுள்ளதா என்பதையும் அந்த ஒரு கணம் நாம் அனைவரும் எண்ணிப்பார்ப்போம்.
அரசியலை தமிழ்மக்களின் உதிரத்தாலும் கண்ணீராலும் உர மூட்ட முயலகூடாது. அவ்வாறு நாம் நடந்தால் வரலாறு எம்மை மன்னிக்கபோவதுமில்லை.
இன்னமும் இனவெறி ஆட்சியளர்களை ஆராதிப்பவர்களாக இருந்து கொண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுநாள் மூலம் தம்மை தமிழ்தேசியவாதிகளாக வேடப்படுத்தி நிற்பவர்கள் யார் என்பதை முள்ளிவாய்கால் மண்ணில் தடம் பதிக்கும் நேரத்தில் கூட அவர்களாகவே உணராது விடினும் இந்த மக்களும் காலமும் நிச்சயம் அவர்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்.
முள்ளிவாய்கால் இனவழிப்பில் தம் உயிர்களை இழந்த அனைத்து உறவுகளையும் நினைவுகூர்ந்து ஒரு கணம் தலைசாய்து பூச்சொரிந்து அவர்தம் காலடியில் வணங்குகின்றேன் என மேலும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம்பெண்ணுக்கு பிடியாணை

image_pdfPRINT
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
கோப்பாய் பொலிஸார் குற்றப்பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டு வழக்கு திறந்த மன்றில் அழைக்கப்பட்ட போதும் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் மன்றில் தோன்றாத காரணத்தால், அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (15) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, அவர்கள் இருவரும் போதையில்  நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.
சிகிச்சை பெற்ற அவர்கள் இருவரும் வைத்தியசாலையிலிருந்து நேற்று வெளியேறினர். அவர்களில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு பிரித்தானியாவின் எதிர்கட்சித் தலைவர் இலங்கைக்கு  எச்சரிக்கை

image_pdfPRINT

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நீதி நிலைநாட்டப்படாது விட்டால் தொடர்ந்தும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்றும் பிரித்தானியாவின் பிரதான எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர்  தலைவர் ஜெரமி கோபின் இலங்கை அரசை எச்சரித்துள்ளார்.

அதேவேளை தமிழர் சுயநிர்ணய உரிமையை மறுப்பது என்பது ஆபத்தானதாகும் எனவும் அவர்; இலங்கையை எச்சரித்ததுடன் இலங்கை அரசானது தழிழர் சுயநிர்ணய உரிமையினை அடிப்படையாக கொண்டு இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டியது கட்டாயமானதாகும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழினப் படுகொலையின் முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் (16) தென்மேற்கு லண்டன் மிற்சம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாவின் அனுசரணையில்இ தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பின் கீழ் முள்ளிவாய்க்கால் நினைவு அனுஸ்டிக்கப்பட்டது,

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்திற்கு உட்பட்ட Portcullis House கட்டடத் தொகுதியின்  Boothroyd Room மண்டபத்தில் இன்று மாலை 6:30 மணி முதல் இரவு 8.30 வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரித்தானியாவின் எதிர்கட்சித் தலைவரும் தொழிற்கட்சியின் தலைவருமான ஜெரமி கோபின்இ நிழல் வெளியுறவு விவகார அமைச்சர் பபியன் கமில்ட்ன் ஆகியோர் உட்பட தொழிற்கட்சியின் மூத்த நாடளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானிய தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையிலேயே இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோபின் இலங்கை அரசை மேற்கண்டவாறு எச்சரித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் நடைமுறையிலுள்ள மிகவும் மோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அவ் அரசை நாம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அதேவேளை இராணுவம் பலவந்தமாக கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதுடன் தமிழ் தாயகத்தில் தொடரும் இராணுவ மயமாக்கல் முடிவுக்கு கொண்டவரப்பட வேண்டும்.
யுத்தத்தின் போது இடம்பெற்ற மிகவும் மோசமான படுகொலைகள்இ சித்திரவதைகள் உட்பட சர்வதேச சட்டங்களை மீறிய சம்பவங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்களுக்கு நாம் வலியுறுத்துகிறோம்.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் யாழ்ப்பாணத்திற்கு சென்றது போல் இல்லாமல் தொழிற் கட்சி ஆட்சிபீடம் ஏறியதும் பிரித்தானிய இராஜதந்திரிகள் உட்பட அதிகாரிகளை ஒரு இடத்திற்கு மாத்திரமன்றி மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைத்து அவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆட்கொணர்வு மனுதாரர்களுக்கு இராணுவ புலனாய்வு அச்சுறுத்தல்

image_pdfPRINT
யாழ்.மேல் நீதிமன்ற சூழலில் இன்று பதட்டம்
யாழ்.மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுவினை தாக்கல் செய்துள்ள மனுதார்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்தவர்கள் நடந்து கொண்டனர்.
நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது. 
அதன் போது மனுதார்கள் மேல் நீதிமன்றில் இருந்த போது நீதிமன்ற சூழலில் பெருமளவான இராணுவ புலனாய்வு பிரிவினர் பிரசன்னமாகி இருந்தனர்.
வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் மனுதார்கள் மற்றும் அவர்கள் உறவினர்கள் நீதிமன்றுக்கு வெளியில் வந்த போது புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
அதனால் அச்சத்திற்கு உள்ளான மனுதார்கள் அது தொடர்பில் தமது சட்டத்தரணிகளுக்கு அறிவித்தனர். பின்னர் அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நேரமாக மனுதார்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறவில்லை.
நீண்ட நேரத்தின் பின்னர் இராணுவ புலனாய்வாளர்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறி , யாழ்.பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இராணுவத்தினருக்கு சொந்தமான (யுஹா) இலக்கமுடைய இரு ஜீப் ரக வாகனத்தில் ஏறி சென்றனர்.
இராணுவ புலனாய்வாளர்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறி சென்ற பின்னரே மனுதார்கள் அவர்கள் உறவினர்கள் நீதிமன்றை விட்டு வெளியேறினார்கள்.
அதன் போது , மனுதார்களிடம் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்க முற்பட்ட போது , அச்சம் காரணமாக தாம் கருத்து கூற விரும்பவில்லை என கூறி சென்றனர்.
இதேவேளை இன்றைய வழக்கு விசாரணையின் போது  பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளமையால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி இருந்தார். 
அதன் போது , நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்டு இருந்த சூழ் நிலைகாரணமாக  அச்ச நிலைமையால் தான் மனு தாக்கல் செய்யவில்லை எனவும் , தற்போதைய நிலையில் அதனை தாக்கல் செய்துள்ளோம். மனுதாரர்கள் அச்சம் காரணமாக மனு தாக்கல் செய்ய பின்நின்ற போதிலும் குறித்த மனு மீதான விசாரணையை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மேற்கொள்ளவுள்ளார் எனும் நம்பிக்கையில் தான் தற்போது மனு தாக்கல் செய்ய முன்வந்தார்கள் என மனு தாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பராளுமன்றில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

image_pdfPRINT

மகாராணியின் அதிகாரபூர்வ நிழல் நிதியமைச்சர் உட்பட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் இடம்பெறுகின்றது.

தென்மேற்கு இலண்டன் மிற்சம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாவின்   அனுசரணையில், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பின் கீழ், பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்திற்கு உட்பட்ட Portcullis House கட்டிடத் தொகுதியின் Boothroyd Room மண்டபத்தில் இன்று மாலை 6:30 மணிக்கு இந் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

தொழிற்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரும், பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ நிழல் நிதியமைச்சருமான ஜோன் மக்டொன்ல், நிழல் சுகாதாரத்துறை அமைச்சர் ஜொனத்தன் அஸ்வேர்த், நிழல் பன்னாட்டு வணிகத்துறை அமைச்சர் பரி கார்டினர், நிழல் வெளியுறவு விவகார அமைச்சர் பபியன் கமில்ட்ன் ஆகியோர் உட்பட தொழிற்கட்சியின் மூத்த நாடளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.

தன்னாட்சியுரிமை உட்பட தமக்கே உரித்தான சகல உரிமைகளையும், சுதந்திரங்களையும் தமிழ் மக்கள் வென்றெடுப்பதற்குத் தொழிற்கட்சி உறுதுணை நிற்கும் என்ற நிலைப்பாட்டை இந்நிகழ்வில் பங்கேற்கும் நிழல் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்த இருப்பதோடு, இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த பன்னாட்டுக் குற்ற மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்தின் ஊடாக சிறீலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு தாம் எடுக்க உள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கருத்துரைகளை ஆற்ற இருக்கின்றனர்.

தொழிற்கட்சியின் நிழல் அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்நிகழ்விற்கு வலுச்சேர்க்கும் முகமாக இதில் பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளைப் பங்கேற்குமாறு தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

பொறுப்புக்கூறலை புறக்கணித்தால் சர்வதேசத்தில் வழக்கு

image_pdfPRINT

-இலங்கை அரசுக்கு ஜஸ்மின் சூக்கா எச்சரிக்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை இலங்கை அரசு, தொடர்ச்சியாக தட்டிக் கழிப்புகளை செய்து, பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் செல்லுமாக இருந்தால் அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் (ITJP) நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா எச்சரித்துள்ளார்.
இறுதி யுத்தம் நடைபெற்ற 2009 மே யின்  இறுதி நாட்களின் போதும் இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த போதும் காணாமல்போனவர்களின் விபரங்களை பட்டியலிட்டும் இணையத்தளம் ஒன்றை உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் (ITJP) நேற்று யாழில் அறிமுகம் செய்தது.
 
ITJP யின் இந்த இணையத்தளமானது இலங்கை இராணுவம் கொடுக்க மறுக்கிற சரணடைந்தவர்களின் பட்டியலலை மீண்டும் உருவாக்குகிறது. இதில் தற்போது 280 பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
 
குறித்த இணையத்தளத்தை பார்வையிட இங்கே அழுத்துங்கள் 
http://itjp.bong.international/
 
இதில் மேலதிக தகவல்களை/திருத்தங்களை itjpsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையிலேயே இந்த அறிமுக நிகழ்வில் தொலைத் திரை (Skype) மூலம் பேசிய ஜஸ்மின் சூக்கா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும்.

2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி ஒரே நாளில் இராணுவத்திடம் சரணடைந்தும் மற்றும் வேறு வழிகளிலும் காணாமல் போனவர்களில் 280 பேரின் பெயர்களையும் அவர்களது புகைப்படங்களையும் அவர்கள் தொடர்பான விவரங்களையும் (ITJP) என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் அரசினால் அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகம் விசாரணைகளை மேற்கொள்ளும் போது மேற்குறிப்பிட்டுள்ள 280 பேர் தொடர்பான தகவல்களில் இருந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்விசாரணையின் முக்கியத்துவம் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலத்தின் தலைவருக்கு நாம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளோம்.

மேலும் மே 18 அன்று இராணுத்திடம் சரனடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இராணுவம் பதிலளிக்க வேண்டும். குறிப்பாக அக் காலப்பகுதியில் கட்டளையிடும் பிரிவில் இருந்த 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோர் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது விடயங்களையும் பதிவு செய்யவதற்கான பொது நிலையான தளம் ஒன்றை பயன்படுத்த வேண்டும்.
மேலும் காணாமற்போனார் தொடர்பான விடயத்தில் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களது பாதுகாப்பு தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக காணாமற்போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்களே சாட்சியாக உள்ளனர் என தெரிவித்தார்.

நினைவு சுடர் நல்லூரில்

image_pdfPRINT
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப் படுகொலையை நினைவு கூறும்  நினைவுச்சுடர்  ஊர்திப் பவணி  இன்று (16) நல்லூரை வந்தடைந்தது.
மாபெரும் மனிதப் படுகொலை நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் நினைவு நாளினை முன்னிட்டு தீப ஊர்திப்பயணம் இடம்பெற்று வருகிறது.
வல்வெட்டித்துறையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட
இந்த ஊர்திப் பவணி  வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களூடாகவும் பயணித்து மே 18ஆம் திகதி  முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடையவுள்ளது.
இந்நிலையில் 2 ஆவது நாளான இன்று நினைவுச்சுடர்  ஊர்தி நல்லலூர் பகுதியை அடைந்துள்ளது.

கார்ப்பிணிப் பெண் கொலை வழக்கின் சந்தேக நபர்களுக்கு பிணை

image_pdfPRINT
ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கில் சுமார் 17 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்த சந்தேகநபர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.
ஊர்காவற்துறை பகுதியில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) என்பவர் கொலை செய்யபட்டார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் சகோதர்களான இருவர் அன்றைய தினம் மாலை மண்டைதீவு சந்தியில் உள்ள ஊர்காவற்றுறை பொலிஸாரின் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும் அன்றைய தினத்திலிருந்து சுமார் 17 மாதங்களாகத் தொடர்ச்சியாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களுக்கு பிணை கோரி அவர்களின் தாயார், சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.
பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், சந்தேகநபர்கள் இருவருக்கும் நிபந்தனையுடனான பிணை வழங்கி இன்று கட்டளை வழங்கினார்.
“ சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் ஒரு இலட்சம் ரூபா பணத்தை வைப்புச் செய்யவேண்டும். சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் 5 இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள் பிணைகளை நீதிமன்றில் முன்னிறுத்தவேண்டும். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும். வெளிநாடு செல்லத் தடை” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை வழங்கினார்.

அணையாத அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றிய யுவதி உடல் கருகி மரணம்

image_pdfPRINT
புகைந்துகொண்டிருந்த அடுப்புக்குள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்று தீக்காயங்களுக்குள்ளாகி சிக்கிச்சை பெற்றுவந்த இளம் பெண் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இணுவில் மேற்கில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சீலன் அஸ்வினி (வயது-21) என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.
கடந்த 8 ஆம் திகதி மதியம் சமைப்பதற்காக அடுப்பைப் பற்ற வைக்க முயன்றார். ஏற்கனவே தீ அணையாது இருந்த அடுப்பை பற்ற வைக்க அதற்குள் இவர் மண்ணெண்ணெயை ஊற்றியுள்ளார். இதனால் தீப்பற்றி யுவதியின் ஆடையில் பரவி எரிந்தது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தீயில் எரிந்தவாறு அலறிய யுவதியை அயல் வீட்டில் இருந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆறு நாட்களாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் யுவதி நேற்று முன்தினம் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
இறப்பு விசாரணையை திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்களை விரட்டும் அதிகாரம் யாருக்கும் கிடையாது- முதலமைச்சர்

image_pdfPRINT
இரணைதீவில் மீள்க்குடியேறச்சென்றுள்ள மக்களை விரட்டும் அதிகாரம் யாருக்கும் கிடையாதென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்கள் காணிகளுக்குத் திரும்பிச் செல்ல சர்வதேச சட்டங்களில் உரித்து உண்டு. அந்த அனுமதியை இலங்கை அரசு வழங்க வேண்டுமென்றும்  கோருகின்றோம். ஏனெனில் அவ்வாறு கொடுப்பதாக இலங்கை அரசும் ஜெனிவாவில் உத்தரவாதம் அளித்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
படையினரால் விடுவிக்கப்படாத தமது பூர்வீக நிலமான இரணைதீவுக்கு கடந்த மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கொடியுடன் சென்று அங்கேயே தங்கியுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று (14) காலை இரணைதீவுக்கு விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்திருந்தனர்.
இந்நிலையிலேயே, அங்கு செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர் முடிவடைந்த பின்னர் அவ்விடத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறல்லாது வடமாகாணத்தில் பெருமளவான காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர். இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறே இரணைதீவையும் பாதுகாப்பு காரணங்களுக்காக விடுவிக்க முடியாது என கூறியுள்ளனர். ஆனால் இங்கு 3 ஏக்கர் அளவிலான காணியில் மாத்திரமே இராணுவத்தினர் உள்ளனர். மிகுதி காணிகள் வெறுமையாகவே உள்ளன. எனவே அக்காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கலாம்.
ஆனால் அது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சரிடமே உள்ளது. அவர்கள் இவ்விடயம் தொடர்பாக அரசியல் ரீதியான முடிவுகளையே எடுப்பார்கள். எம்மிடமுள்ள அதிகாரங்களை கொண்டு இவற்றை விடுவிக்க முடியாது. எனவே நாம் காணி தொடர்பான ஆவணங்களை தயார் செய்து பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கவுள்ளோம்.
மேலும், இங்கு குடியேறியுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். விரைவில் இங்கு நிலவும் குடிநீர், போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவோம் என தெரிவித்தார்.

காலில் விலங்கிட்ட நிலையில் கைதி அவதி; மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குரல் கொடுப்பார்களா ?

image_pdfPRINT

காலில் விலங்கிட்ட நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் கைதி ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் விடுதி இலக்கம் 08இல் காய்ச்சல் காரணமாக குறித்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் கைதியை சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மனிதாபிமானமற்ற முறையில் கட்டிலுடன் விலங்கிட்டு உள்ளார். அதனால் குறித்த நபர் காலில் விலங்கு மாட்டப்பட்ட நிலையிலையே சிகிச்சை பெற்று வருகின்றார்.
அது குறித்து குறித்த விடுதியில் சிகிச்சை பெற்று வரும் நபரொருவர் தெரிவிக்கையில் ,
விடுதியில் குறித்த நபரை அனுமதித்த நேரம் முதல் அவரது காலை கட்டிலுடன் இணைந்து சிறைச்சாலை உத்தியோகஸ்தர் விலங்கிட்டு உள்ளார். விலங்கிட்ட பின்னர் குறித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர் விடுதியில் தங்கி நில்லாது வேறு இடங்களுக்கு சென்று விடுவார்.
அந்நிலையில் குறித்த நோயாளிக்கு இயற்கை உபாதைகள் ஏதேனும் ஏற்பட்டால் , அவர் மலசல கூடம் செல்ல முடியாத நிலையில் அவவருக்கு அருகில் இருக்கும் வேறு நோயாளிகள் தான் குறித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தரை தேடி சென்று அழைத்து வந்து நோயாளியை மலசல கூடம் அழைத்து செல்ல முடியும்.
அதேவேளை பார்வையாளர் நேரத்தின் போது கூட நோயாளியின் காலில் விலங்கிட்டு இருப்பதனால் , வேறு நோயாளிகளை பார்வையிட வருவோர் குறித்த நோயாளியை விசித்திரமாக பார்ப்பதனால் , அவமானத்தால் கூனி குறுகி பார்வையாளர் நேரம் முடிவடையும் வரையில் , அவர் தனது முகத்தினை மறைத்தவாறே இருப்பார்.
சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் மனிதாபிமானமற்ற இந்த செயலினால் , குறித்த நோயாளி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வைத்திய சாலை நிர்வாகமும் கவனத்தில் எடுக்காத நிலையே காணப்படுகின்றது என தெரிவித்தார்.
error: Content is protected !!