பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (75) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
இவர் 1,500 மீற்றர் ஓட்டம் மற்றும் 5000 மீற்றர் விரைவு நடை போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இதேவேளை, 800 மீற்றர் ஓட்டத்தில் வெங்கலப் பதக்கத்தையும் 5000 மீற்றர் ஓட்டத்தில் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்- வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞனை கடந்த 08ஆம் திகதி திருட்டுச் சம்பவம் ஒன்றின் விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்துள்ளனர்.
இந்நிலையில் தனது நண்பனுடன் குறித்த இளைஞன் பொலிஸ் நிலையம் சென்றிருந்த நிலையில் இருவரையும் கைதுசெய்த பொலிஸார் இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த அலெக்ஸ் பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இளைஞனின் உயிரிழப்பை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில், உடலில் சித்தரவதை காயங்கள் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதேவேளை பொலிஸார் தன்னை எவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள் என்பது குறித்து இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் கூறிய வீடியோவொன்றும் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் நண்பன் மீதான களவு குற்றசாட்டு தொடர்பிலான வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
யாழ் – வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் அப்பகுதி மக்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
குறித்த இளைஞனின் இறுதி கிரியைகள் சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைக்காக மயானத்திற்கு எடுத்து செல்லும் போது அப்பகுதி மக்களால் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ” அலெக்ஸ் இறந்து 48 மணி நேரம் கடந்தும் இது வரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸ் விசாரணைக்குழு 48 மணி நேரத்திற்கு மேலாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் பொலிசாரின் விசாரணை மீது எமக்கு திருப்தி ஏற்படவில்லை. மாறாக அவர்கள் மீது சந்தேகம் தான் வலுத்து வருகின்றது” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி மானிப்பாய் மற்றும் பலாலி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விணணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க தடைவிதிக்க கோரியே பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.
நினைவு கூரும் உரிமையை யாரும் தடை செய்ய முடியாது என்றும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல் நினைவுகூர முடியும் என தெரிவித்து நீதிமன்றம் பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.
இதேவேளை மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி அச்சுவேலி மற்றும் தெல்லிப்பழை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.
தமிழீழ தேசிய கொடி நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21 ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்டு வருவது தமிழீழப் பரப்பில் வாழும் அத்தனை தமிழர்களும் அறிந்தது.
அந்த வகையில் பிரித்தானியாவின் மையப்பகுதியான Trafalgar Square நேற்றையதினம் (19 நவம்பர்) ஆயிரக்கணக்கான புலம்பெயர் வாழ் தமிழர்களின் உணர்வு எழுச்சியுடன் சிறப்பாக இடம்பெற்றது.
எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது.
தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அவரது பாசறையில் ஏற்றிவைக்கப் பெற்றது.
அன்று தொடக்கம் இன்று வரை தமிழீழ தேசிய கொடிநாள் ஆனது உலகெங்கும் வாழும் தமிழர்களாலும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்ச்சி உடன் அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டுவரப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் என வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் அன்றி, மாகாணசபைகளினால் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டால், அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
13 ஆவது திருத்தச்சட்டத்தில் கல்விக்கான அதிகாரம் கூறப்பட்டுள்ளதே ஒழிய, பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.
அப்படி நேர்ந்தால், கிழக்கு மாகாணத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் அனுசரனையுடன் வஹாபி பல்கலைக்கழகங்கள் அல்லது ஷரீஆ சட்டத்தை கற்பிக்கும் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியுமாக இருக்கும்.
அதேபோல், கனடாவின் ஒன்டேரியோ பிராந்திய பாடசாலைகளில், இலங்கையில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதாக கற்பிக்கப்படுவது போன்று, வடக்கில் ஆரம்பிக்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் மனங்களை மாற்றும் இவ்வாறான பாடத்திட்டங்கள் உள்வாங்கப்பட்டுவிடும்.
பல்கலைக்கழகங்கள் நாட்டை முன்னேற்றும் வகையிலும், நாட்டுக்கான புத்திஜீவி சமூகத்தை உருவாக்கும் வகையிலேயே இருக்க வேண்டுமே ஒழிய, அரசியல் நோக்கத்திற்காகவோ ஆளுநர் அல்லது முதல்வர்களின் தேவைக்காகவோ ஸ்தாபிக்கப்படக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 24 ஆவது படைப்பிரிவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
முன்னதாக மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தியதை தொடர்ந்து சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த சிரமதான பணியில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், பணிக்குழுவினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதான பணியினை முன்னெடுத்திருந்தனர்.
இவ்வாண்டும் கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும் அனைத்து மாவீரர் பெற்றோர் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறும் முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் சட்டவிரோதமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என அறிவித்தே நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு வருபவர்கள், கிழக்கு ஆபிரிக்க நாட்டிற்கு நாடு கடத்த வேண்டும் என்ற திட்டம் முதன்முதலில் 2022 ஏப்ரல் மாதம் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனால் முன்வைக்கப்பட்டது.
இந்த திட்டமானது மனிதாபிமானமற்றது என அகதிகளுக்கான தொண்டு நிறுவங்களும் இது மனித உரிமை சட்டங்களை மீறுவதாக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டிருந்தன.
இந்நிலையில் ருவாண்டாவில் இருந்து வந்த அகதிகளை அவர்கள் தப்பி வந்த அதே நாட்டிற்கு திருப்பி அனுப்புவது மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாக அமையும் என உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
குறிப்பாக புகலிடம் கோரும் ஒரு நபரை அவரது பூர்வீக நாட்டிற்குத் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அவ்வாறு செய்வது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
ருவாண்டாவிற்கு மக்கள் நாடு கடத்தப்பட்டால் அந்நாட்டு அரசாங்கத்தால் பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுப்பப்படலாம் என்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.
ஆலயத்தில் காலை திருப்பலியின் நிறைவில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன் போது உயிரிழத்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி காலை திருப்பலி வழிப்பாட்டுக்கு மக்கள் கூடியிருந்த வேளை, இலங்கை விமான படையின் “சுப்பர் சொனிக்” விமானங்கள் ஆலயத்தின் மீது குண்டு வீசியதில் ஆலயத்தில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த 8 வயதுச் சிறுமி உள்ளிட்ட 13 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், 25க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாவீரர் பணிமனை பிரித்தானியாவின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் “மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு” 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் ஆரம்பமானது.
தாயக விடுதலைப் போரில் தங்கள் பிள்ளைகளையும், உடன் பிறந்தார்களையும், உறவுகளையும் தியாகம் செய்த மதிப்புக்குரியவர்களை மதிப்பளிக்கும் நாளாக இந்த நாள் தமிழீழ தேசிய தலைவரினால் தாயகத்தில் அடையாளப்படுத்தப்பட்டது.
இந்நாளானது மரபுகளுக்கு ஏற்ப நடைபெற்றது. தங்கள் உறவுகளை தமிழினத்திற்கு உவந்தளித்து நிற்கும் உறவுகளின் மனத்துயரினை குறைப்பதற்கும், தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த இலட்சிய வீரர்களின் இலக்கினை நாம் நிச்சயம் அடைவோம் என்று உறவுகளுக்கு உறுதி அளிப்பதற்குமான நாளாக தாயகத்தில் இந்நாட்கள் கடைபிடிக்கப்பட்டது. இவ்வாறான நிகழ்வுகளில், தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும் கலந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் பிரித்தானியாவில் இந் நிகழ்வு நடைபெற்றது.
உலகத் தமிழர் வரலாற்று மைய இளையோரின் பண்ணிசை முழங்க மாவீரர் உறவுகள் துயிலும் இல்ல வாயில் இருந்து மதிப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து பொதுச் சுடர்கள் ஏற்றப்பட்டன. பொதுச்சுடர்களை பிரதான குருக்கள் சதீஷ் ஐயா, திரு.இராஜலிங்கம், திருமதி.நிலோசனா செல்வன்.திகழ்பருதி, செல்வி.அங்கயற்கண்ணி ஆகியோர் ஏற்றினர். பிரித்தானியாவின் தேசியக் கொடியினை திருமதி.கௌசல்யா அவர்கள் ஏற்ற, தமிழீழ தேசிய கொடியினை திரு.ரமேஸ்வரன் அவர்கள் ஏற்றினர்.
தொடர்ந்து பொது மாவீரர் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை திருமதி.துக்சி அவர்கள் ஏற்ற, மலர் மாலையினை திரு,திருமதி விக்னேஸ்வரன் அணிவித்தனர். அக வணக்கத்தினை தொடர்ந்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தொண்டர்களின் வரவேற்புடன் மாவீரர் குடும்பங்கள் பிரதான மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இன்றைய இந்த சிறப்பு மிக்க நிகழ்வில், பிரித்தானியாவில் வாழும் பல நூற்றுக்கணக்கான உறவுகள் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல காணியினை விடுவிக்க கோரி மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
யுத்தம் முடிவடைந்து 14 வருடம் கடந்த நிலையிலும் மாவீரர் துயிலுமில்லத்துக்குரிய காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்படவில்லை.
மாவீரர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்லறைகளில் அஞ்சலி செலுத்த வேண்டும் என தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீPதரன், முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேலமாலிதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் இந்திய வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தனியான வலயம் இருப்பதாக விமல் வீரவன்ச எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை வீரர் ஒருவர் கூட அந்த பிராந்தியத்திற்குள் நுழைய முடியாது என்று கூறிய வீரவன்ச, இந்த உண்மை பலருக்கும் தெரியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றி அவர் இதனை தெரிவித்தார்.