SHARE

டிலக்‌ஷன் மனோரஜன்

மாவீரர் பணிமனை பிரித்தானியாவின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் “மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு” 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் ஆரம்பமானது.

தாயக விடுதலைப் போரில் தங்கள் பிள்ளைகளையும், உடன் பிறந்தார்களையும், உறவுகளையும் தியாகம் செய்த மதிப்புக்குரியவர்களை மதிப்பளிக்கும் நாளாக இந்த நாள் தமிழீழ தேசிய தலைவரினால் தாயகத்தில் அடையாளப்படுத்தப்பட்டது.

இந்நாளானது மரபுகளுக்கு ஏற்ப நடைபெற்றது. தங்கள் உறவுகளை தமிழினத்திற்கு உவந்தளித்து நிற்கும் உறவுகளின் மனத்துயரினை குறைப்பதற்கும், தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த இலட்சிய வீரர்களின் இலக்கினை நாம் நிச்சயம் அடைவோம் என்று உறவுகளுக்கு உறுதி அளிப்பதற்குமான நாளாக தாயகத்தில் இந்நாட்கள் கடைபிடிக்கப்பட்டது. இவ்வாறான நிகழ்வுகளில், தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும் கலந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் பிரித்தானியாவில் இந் நிகழ்வு நடைபெற்றது.

உலகத் தமிழர் வரலாற்று மைய இளையோரின் பண்ணிசை முழங்க மாவீரர் உறவுகள் துயிலும் இல்ல வாயில் இருந்து மதிப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து பொதுச் சுடர்கள் ஏற்றப்பட்டன. பொதுச்சுடர்களை பிரதான குருக்கள் சதீஷ் ஐயா, திரு.இராஜலிங்கம், திருமதி.நிலோசனா செல்வன்.திகழ்பருதி, செல்வி.அங்கயற்கண்ணி ஆகியோர் ஏற்றினர். பிரித்தானியாவின் தேசியக் கொடியினை திருமதி.கௌசல்யா அவர்கள் ஏற்ற, தமிழீழ தேசிய கொடியினை திரு.ரமேஸ்வரன் அவர்கள் ஏற்றினர்.

தொடர்ந்து பொது மாவீரர் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை திருமதி.துக்சி அவர்கள் ஏற்ற, மலர் மாலையினை திரு,திருமதி விக்னேஸ்வரன் அணிவித்தனர். அக வணக்கத்தினை தொடர்ந்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தொண்டர்களின் வரவேற்புடன் மாவீரர் குடும்பங்கள் பிரதான மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இன்றைய இந்த சிறப்பு மிக்க நிகழ்வில், பிரித்தானியாவில் வாழும் பல நூற்றுக்கணக்கான உறவுகள் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email