SHARE

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை வாடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு கடற்படை புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு -தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்று கடற்பரப்பில் புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளில் இருந்து வந்து நூற்றுக்கணக்கான வாடிகளை அமைத்து கடலட்டை பிடிக்கும் தொழில் இடம்பெறுகிறது. இந்த நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்த வலியுறுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தை நடத்தியவர்களில் பலருக்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளை வானில் ஏத்துவம் 4ஆம் மாடியைப் பார்க்க ஆசையாக இருக்கிறதா? என்று அச்சுறுத்தலை கடற்படையின் புலனாய்வாளர்களால் விடுக்கப்படுகின்றது என்று மருதங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கும் பிரதேச செயலருக்கும் இடையிலான கலந்துரையாடலில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். கடலட்டை வாடி தொடர்பான முடிவுகள் ஏதும் எட்டப்படாது கலந்துரையாடல் நிறைவு பெற்றது. எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் கலந்துரையாடலில் முடிவுகள் எட்டப்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தவறினால் மாபெரும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email