இலங்கையுடனான ஆயுதவிற்பனையை நிறுத்தக்கோரி பிரித்தானியாவில் போராட்டம் நடத்திவரும் புலம்பெயர் தமிழ் இளைஞனின் குடும்பத்தாருக்கு இலங்கையில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்படி அச்சுறுத்தல் வீடுக்கப்பட்டுள்ளதாக குறித்த இளைஞனான இளையதம்பி கலைவாணன் என்பவரின் பெற்றோரால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இலங்கையுடனான ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியா வாழ் தமிழ் இளைஞர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். பிரித்தானியாவிடமிருந்து வாங்கும் ஆயுதங்களைக்கொண்டே இலங்கையில் சிங்கள் அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்பை செய்து வருகின்றது என்பதை அங்குள்ள பிரித்தானிய நாடுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தி அதனை நிறுத்த வேண்டுமென போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரும்பாலான புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் பங்கேற்றுவரும் இப்போராட்டத்தில் மேற்படி இளையதம்பி கலைவாணன் என்பரும் பெரும் பங்கேற்றுவருகின்றார்.
இந்நிலையிலேயே கடந்த 02.05.2018 அன்று இரவு 12.30 மணியளவில் குறித்த இளைஞனின் இலைங்கை மன்னாரிலுள்ள ஆஸ்பத்திரி வீதி எழில் நிகர் மன்னார் எனும் முகவரியுடைய வீட்டுக்கு சென்ற இராணுவப்புலனாய்வுப் பிரிவினர் அவரது பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தாயாரான இளையதம்பி சுந்தரியால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் 04.05.2018 அன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் விட்டுக்குள் நுழைந்த இராணுவப்புலனாய்வு பிரிவினர் தனது மகன் கலைவாணன் எங்கே என்று கேட்டதாகவும் அவர் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார். இப்படி தொடர்ந்து செய்தால் அவரை இல்லாது ஒழித்துவிடுவோம் என்றும் அவரது தொலைபேசி இலக்கம் முகவரி என்பதை கேட்டு மிரட்டியதாகவும் இதனால் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு தமக்கு பயமாக உள்ள காரணத்தால் தாம் பொலிஸ் நிலைத்திற்கு செல்லவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேனிடையே குறித்த இளைஞனுக்கு முன்னரும் இதுபோல் கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டு இருதடவை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.