வடக்கு மாகாணத்தில் 5வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளின் இடமாற்றத்திற்கு பிரதிப் பிரதம செயலாளரினால் , கடந்த வருடம் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் ஆளுநரின் கோரிக்கை அமைய பின்னர் குறித்த இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து அரச சாரதிகள் சங்கம் இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட அரச சாரதிகள் சங்கம், ஆளுநருக்கான மகஜர் ஒன்றையும் ஆளுநர் அலுவலகத்தில் கையளித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ் மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்ததுடன் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டார்.
இந்நிலையில், நல்லை ஆதீனத்திற்குச் சென்ற ஐ.நா.வதிவிடப்பிரதிநிதி ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரம்மாச்சார்ய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றதுடன், நல்லூர் கந்தசுவாமி கோவிலிலும் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன் பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் அங்கு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது இந்தியா – இலங்கைக்கு இடையேயான பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த சிறுவன் தன்வந்தைச் சந்தித்த ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி தனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்காசியாவின் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு அடைந்துள்ளது.
தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ்.பொது நூலகத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் யாழ் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சிவகரன் அனுசியா ,நூலக ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது நூலகம் எரிக்கப்பட்டபோதும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகளின்போதும் உயிரிழந்தவர்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த அவர்,
தமிழர்களுக்கு என ஒரு தனித்துவமான இனம், அவர்களுக்கே உரித்தான மொழி, வணக்க பண்பாட்டு முறைகள் உள்ளன.
ஆனால், இலங்கை அரசு, இங்குள்ள படைகள் மூலம், சிங்கள அடையாளங்களையும் சிங்கள பண்பாட்டு முறைகளையும் தமிழர் பிரதேசத்திற்குள் திணிக்க முயல்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எமது இனத்திற்கு இதுவும் ஒரு சாபக்கேடு என தெரிவித்த சிறீதரன், நாம் போராடுகின்ற இனமாக இருந்தால் சில விடயங்களை எதிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாங்களும் சில விடயங்களை போராட்டம் மற்றும் செயற்பாடுகள் மூலமே முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொது வேட்பாளர் தொடர்பிலான முன்னெடுப்புக்களை முன்னெடுத்துவரும் சிவில் சமூக பிரதிநிதிகள், பத்தி எழுத்தாளர்கள் உள்ளிட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் என்னை நேரில் சந்தித்து கதைத்தார்கள்.
பொது வேட்பாளர் தொடர்பிலான எனது நிலைப்பாட்டை அவர்களுக்கு கூறினேன். அவர்களும், பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பிலான தமது கருத்துக்களையும் கூறினார்கள்.
பொது வேட்பாளர் தொடர்பில் பொது வெளியில் கருத்துக்களை பரிமாறும் நிகழ்வினை நடாத்தி ,அதில் ஆரோக்கியமான கலந்துரையாடலை நடாத்துவோம் என நான் தெரிவித்திருந்தேன். அதற்கு அவர்களுக்கும் சம்மதித்தர்கள்.
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி பொது வேட்பாளர் தொடர்பில் கருத்துக்களை பரிமாறும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாது, இவர் அவரின் ஆள் இவரின் ஆள் என தாக்கி பேசாது தமது கருத்துக்களை முன் வைத்து ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் இடம்பெற்றால் மக்களுக்கும் தெளிவு கிடைக்கும்.
அதற்கவே அந்நிகழ்வை ஒழுங்கமைத்துள்ளேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக , நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு என்னால் செல்ல முடியவில்லை. அதனால் அவர் என்னை வீடு தேடி வந்து சந்தித்தார். அதன் போது அரசியல் ரீதியாக நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.
பொருளாதார ரீதியாக வடக்கு மக்களை மேலே ஏற்றி விட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கமாக இருக்கிறது இளைஞர்கள் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டு.
அரசியல் ரீதியான பிரச்சனைகள் பற்றி கதைக்கவில்லை. எல்லாவற்றையும் பொருளாதார ரீதியான பிரச்சனைக்குள் வைத்தே பார்க்கின்றார்.
பொது வேட்பாளர் சம்பந்தமாக பேச்சு எழுந்தது. அதன் போது , தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமைம், தகுதி , பின்னணி இல்லை என ஜனாதிபதி கூறினார்,
நான் சிரித்து விட்டு , எனக்கு அது பற்றி தெரியாது. அதற்கு உரிய குழுக்கள் அது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் பொது வேட்பாளர் தொடர்பில் அறிவிப்பார்கள் என கூறினேன்.
சிறுபான்மையினரின் ஆதரவு தனக்கு தேவை என்பதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி தேர்தல் முடிய பாராளுமன்ற தேர்தலை நடத்தப்படும் எனவும் , அதனை தொடர்ந்து மாகாண சபை தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார்.
எங்களின் வாழ்க்கை தரத்தை மேல் எழுப்பினாலும் , அரசியல் ரீதியான தீர்வுகள் தரவோ எம்மை நாம் வலுப்படுத்தவோ விடமாட்டார்கள் என்பது தெரிகிறது என சி.வி, விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி நகரில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதுடன், மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தை உரிய காலத்தில் எம்மால் முடிக்க முடியவில்லை. ஆனால் இன்று நாம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். இன்று கிளிநொச்சி நகரில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நாம் திட்டமிட்டுள்ளோம். இந்த பிரதேசத்தில் வலுசக்தித் திட்டங்களை மீள உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கியுள்ளோம்.
கிளிநொச்சியில் இவ்வாறான செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதியும் நாம் ஏற்கனவே வழங்கியுள்ளோம். இந்தப் பிரதேசங்களில் உள்ள காணிப்பிரச்சினைகள் மற்றும் காணாமற்போனோர் பிரச்சினை தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
எமது நாட்டில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க எந்தச் சட்டமும் இருக்கவில்லை. அரசியல் யாப்பில் உள்ள அடிப்படை உரிமைகள் மாத்திரமே இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, பெண்களுக்கான இரண்டு புதிய சட்ட மூலங்களை தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். பெண்களின் உரிமைகள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், அதற்கேற்ப அந்த சட்டத்தின் கீழ் நாங்கள் பணியாற்ற முடியும். மேலும், வீட்டில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பையும் கவனிக்க வேண்டும்.
இந்த பெண்கள் உரிமை சட்ட மூலங்கள் ஏற்கனவே இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அந்த சட்ட மூலங்களை அனைவரும் படித்துப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிர்வாக தெரிவு, கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது, யுத்தம் முடிந்த பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீரக்கப்படாமல் உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், ஜனாதிபதியின் வடக்கின் விஜயம் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்சதற்காகவே அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த கூட்டத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், ரெலோ இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி, மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார மாற்று யோசனை’ மற்றும் ‘பொது நிதி மேலாண்மை யோசனை’ ஆகிய இரண்டு புதிய சட்டமூலங்கள் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஆளுங் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் குறித்த இரண்டு சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதிய சட்டமூலங்கள் தொடர்பாக நாடாளுமன்றில் எதிர்வரும் நாட்களில் விவாதம் நடைபெறவுள்ளது.
சட்டமூலங்கள்நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்கள் உயர்நீதிமன்றில் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கு இரண்டுவார காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இரண்டு முக்கிய சட்டமூலங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார மாற்றத்துக்கான வரைவின் பிரகாரம், இலங்கை முதலீட்டுச் சபையை இல்லாதொழித்து, பொருளாதார ஆணைக்குழு உள்ளிட்ட 5 நிறுவனங்களை நிறுவுவதற்கு இதனூடாக முன்மொழியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டால் முதலீட்டாளர்கள் நாட்டில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஓரு சிலரின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இலங்கை முதலீட்டுச் சபையின் தொழிற்சங்கங்கள் அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளன.
பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவேந்தல் நாளில் சிறிலங்காவில் போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் தாயகம் மற்றும் உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் பிரித்தானியாவிலும் தலைநகர் லண்டனில் உள்ள பிரதமரின் வாசஸ்தல முன்றலிலும் ஒக்ஸ்போர்ட் நகரில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே மேற்படி இரு இடங்களிலும் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் இலங்கையில் யுத்தத்தின் போது இறந்தவர்களின் பெயர் விபரங்கள் செயற்பாட்டாளர்களினால் கணக்கெடுக்கப்பட்டன.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த நிலையிலும் இன்றுவரை யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களோ பட்டியலோ யாரிடமும் இல்லை. இதனால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு (HRDAG) ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துவருகின்றன.
இதன் மூலம் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை ஆவணப்படுத்தி சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதியை சட்டரீதியாக நிரூபிக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக முன்பாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைநேந்தல் நிகழ்வில் இறந்தவர்களை கணக்கெடுக்கு பணியினை செயற்பாட்டாளர்களான சசிகரன் செல்வசுந்தரம், மநுமயூரன் கிருபானந்த மநுநீதி, ஜெஸ்லின் உதயராணி யோகானந்தம், தனுஷாத் மரியநேசன், மேகலக்சன் சந்திரவர்மன், நிலானி சந்திரபர்மன், பிரசாந் இராசரத்தினம், றோய் ஐக்ஷான் யேசுதாசன், சிவலிங்கம், புஸ்பகாந், கங்காதரன் ரிலக்ஸ்சன், தங்கவேலாயுதம் வானுசன், முரளீதரன் விஐயசுந்தரம்,வேலும்மயிலும் சுபேகா, விஷ்வா றமேஷ், விதுரா விவேகானந்தன், விதுஷன் கணேசமூர்த்தி, அமல்ராஜ் ஜெயக்குமார், கனகசபாபதி கார்த்திகேசன், பிரான்சிஸ் அன்ரன் அருள்சீலன், கஜானந் சுந்தரலிங்கம், துஷானி இராஜவரோதயம், நிர்மல் தர்ஷன், சுபமகிஷா வரதராசா, மேரி யூலியானா ஆகியோரும்
ஒக்ஸ்போர்ட் நகரில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைநேந்தல் நிகழ்வில் செயற்பாட்டாளர்களான புகழினியன் விக்டர் விமலசிங்கம், அழகரெத்தினம் நிரோஜன், கோகுலன் சிவசிதம்பரம், மரியநாயகம் வேதநாயகம், ஈஸ்வரன் டறோஷன், ஜெஸ்லின் உதயராணி யோகானந்தம், சிவநாதன் டிலக்சன், பத்மநாதன் துலக்ஷன், உதயராஜா பவசுதன், சந்திரசேகரன் கிஷாந்தன் ஆகியோரும்இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணியை முன்னெடுத்திருந்தனர்.
சிறிலங்காவில் தமிழருக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை பிரித்தானியா ஏற்றுக்கொள்வதுடன் நீதியை பெற்றுத்தர முன்வரவேண்டி வலியுறுத்தி பிரித்தானிய பிரதமரிடம் இன்று (18.05.2024) மனு ஒன்று கையளிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் தமிழனப்படுகொலையின் 15 ஆவது ஆண்டு நினைவு நாளான இன்றைய தினமே இனப்படுகொலைகளை தடுப்பது மற்றும் வழக்கு விசாரணைகளுக்கான சர்வசே மையத்தினால் (ICPPG) மேற்படி மனு கையளிக்கப்பட்டது.
சிறிலங்கா இராணுவத்தின் திட்டமிட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ICPPG யின் உறுப்பினர்கள் என கையொப்பமிடப்பட்ட குறித்த மனுவினை றோய் ஜக்ஷன் யேசுதாசன், சசிகரன் செல்வசுந்தரம், மனுமயூரன் கிருபானந்த மநுநீதி. கஜானந்த் சுந்தரலிங்கம், சுபமகிஷா வரதராசா, மற்றும் துசானி ராஜவரோதயம் ஆகிய செயற்பாட்டாளர்கள் கையளித்திருந்தனர்.
குறித்த மனுவில் முக்கிய விடயமாக சிறிலங்காவில் நடைபெற்றது தமிழினப்படுகொலை தான் என்பதை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க இங்கிலாந்திலோ அல்லது மற்றய நாடுகளுடன் கூட்டாகவோ ஏற்பாடு செய்யுங்கள். அத்துடன் சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மற்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் கோத்தபாஜ ராஜப்க்சே மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு உடனடியாக பயணத்தடை விதிக்குமாறும் 15 ஆண்டுகளுக்கு பின்னரும் சிறிலங்காவில் தொடர்ந்தும் தமிழினப்படுகொலைகள் தொடர்வதால் இவ்விடயங்கள் தொடர்பில் உலகெங்கிலுமுள்ள பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக கையொப்பமிட்டு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.