SHARE

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அப்போதே புரிந்த விடயம், இப்போதுதான் எமக்குப் புரிந்திருக்கிறது என்று பொது பலசேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ‘தந்திர நரி’ என்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது முற்றிலும் உண்மையே.

பிரபாகரனுக்கு அப்போதே புரிந்த விடயம், தற்போதுதான் எமக்கு புரிந்துள்ளது.

அரசியலில் இடம்பெறும் ஒவ்வொரு விடயங்களையும் பிரதமர் தமக்கு சாதகமான முறையில் – மிகத் தந்திரமான முறையில் எவருக்கும் தெரியாத வகையில் பயன்படுத்திக் கொள்கின்றார்.

நாட்டு மக்களுக்கு அரசியல்தீர்வு பெற்றுத் தருவதாக கூறி அவரே, இனங்களுக்கிடையில் மறைமுகமாக வன்முறையை தோற்றுவிக்கின்றார்.

இனிவரும் காலங்களில் எந்த அரசியல் தரப்பினருக்கும் ஆதரவு வழங்க போவது கிடையாது. நாட்டு மக்கள் மகிந்தவையும் நம்ப வேண்டாம் மைத்திரியையும் நம்ப வேண்டாம்.

சிறந்த அரசியல் தலைவரை சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைந்து தெரிவு செய்ய வேண்டும்.

நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கியமாக உள்ளன.

ஆனால் இரண்டு பிரிவினரின் கோரிக்கைகளையும், கடந்த அரசும், தற்போதைய அரசும் நிறைவேற்றவில்லை.

சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்கள் கடந்த காலங்களில் அரசியல் ரீதியில் விட்ட தவறுகளை இனிமேலும் தொடர வேண்டாம்” என்று ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சிறைச்சாலையில் தனக்கு காற்சட்டையை அணிவிக்க முயற்சிக்கப்பட்ட போதும், தான் அதனை அணியவில்லை என்றும் ஞானசார தேரர் கூறினார்.

சிறையில் இருந்த ஐந்து நாள்களும் தான், காவி உடையை கழற்றி வைத்துவிட்டு, சாரமும் சட்டையும் அணிந்திருந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email