மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களைப் பறித்துக் கொள்ளாமல், வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
மாளிகாவத்தையில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மே நாள், பேரணியில் உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உடனடியாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அரசியலமைப்பில் திருத்தம் செய்து, மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களை பறித்துக் கொள்ளும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா அரசாலங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதால், இலகுவாக திருத்தங்களை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ காணி, காவல்துறை அதிகாரங்களை நீக்காமல், வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினால், அது தமிழ்ப் பிரிவினைவாதிகளின் தேவைகளைத் திருப்திப்படுத்துவதாக அமைவதுடன், தீவிரவாதத்தைத் தோற்கடித்ததன் பெறுமதியையும் குறைத்து விடும்.
தமிழ்ப் பிரிவினைவாதிகளை நாம் இராணுவ ரீதியாகத் தோற்கடித்துள்ள போதிலும், ஏனைய வழிகளில் அவர்கள் பலமாகவே செயற்படுகின்றனர்.
தமிழ்ப் பிரிவினைவாதிகள் வடக்கு மாகாணசபையின் அதிகாரத்தைக் கைப்பற்றினால், வடக்கு மாகாணத்தில் உள்ள எல்லா இராணுவ முகாம்களையும் அகற்றி விடுவார்கள்.
மாகாண முதல்வரின் கீழ் செயற்படும் ஒரு மாகாண காவல்துறையை உருவாக்குவார்கள்.
வடக்கு, கிழக்கில் தமது கொலனி ஆட்சியை உருவாக்குவதற்காகவே இந்தியாவும், மேற்கு நாடுகளும் அங்கு தேர்தலை நடத்த வலியுறுத்தி வருகின்றன.
வடக்கு மாகாணத்தின் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், கிழக்கு மாகாணத்தை அதனுடன்
இணைக்க முனைவார்கள்.
இரு மாகாணங்களும் ஏற்கனவே இணைக்கப்பட்டதன் பின்னணியில் மேற்கு நாடுகளே இருந்தன.
அவர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நிதியைக் கொடுத்து நாட்டில் சிங்கள – முஸ்லிம் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைக்கவுள்ளது.
அதன் பின்னர், கிழக்கு மாகாணசபையை அவர்கள் வடக்குடன் இணைக்கவுள்ளார்கள்.
மேற்கு நாடுகளின் அட்டவணைப்படி, அந்த ஒன்றிணைந்த மாகாணசபை, நிர்வாகத்தை ஏற்று நடத்தும்படி ஐ.நாவிடம் வேண்டுகோள் விடுக்கும்.
தமிழ்ப் பிரிவினைவாதிகள் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் மட்டுமே வசிக்க வேண்டும் என்றும், சிங்களவர்களும், முஸ்லிம்களும் இருக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்.
மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்கள் பறிக்கப்படாமல் அங்கு தேர்தல் நடத்தப்பட்டால், அவர்களுக்கு அதற்கு சட்டபூர்வ அதிகாரங்களை வழங்கி விடும் என்றும் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.