பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வடக்கில் 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் பலர் மாணவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கில் அரசியல் பதற்றம் ஏற்பட்டதை அடுத்தே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
எனினும் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் வெவ்வேறு புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளனர்.
தீவிரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் வடக்கில் நேற்று 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இவர்கள் அனைவரும் 2009ம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி, தெரிவித்துள்ளார்.
இவர்கள் சிறிலங்கா அரசின் புனர்வாழ்வைப் பெற்றவர்களோ, போரின் முடிவில் சரணடைந்தவர்களோ அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டு தற்போது வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுகுறித்து அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியான, சந்திரா வாகிஸ்ரா, 20 தொடக்கம் 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக
பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
உரிய நடைமுறைகளின்றி யாரும் கைது செய்யப்படவில்லை, அனைவரும் அதிகாரபூர்வமாகவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மேலும் தாம் கைது செய்யவுள்ள மாணவர்கள் 10 பேரின் பட்டியலை யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சிறிலங்கா காவல்துறை அனுப்பியுள்ளது.
சிறிலங்காவில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள், நீதிமன்றத்தில் எந்தக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமலேயே 18 மாதங்கள் தடுத்து வைக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.