SHARE

இந்த அரசாங்கள் தமிழர்கள் மத்தியில் அச்சநிலையினை ஏற்படுத்தி இயல்பு வாழ்வினைக் குழம்பும் நோக்குடனேயே வடக்கில் இளைஞர் யுவதிகளை தொடர்ந்தும் கைதுசெய்து வருகின்றது என தெரிவித்த கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சிறிதரன் இதனைக் தடுக்க சர்வதேச நாடுகள் தலையிட்டு தடுத்துநிறுத்த முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

வடக்கில் நடைபெற்றுவரும் கைதுகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் கொழும்பு ஊடகத்துக்கு தெரிவிக்கையில்,

வடக்கில் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை இராணுவத்தினர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் கைதுசெய்து வருகின்றனர். யாழ்.பல்கலைக் கழக மாணவர்களையும் தாக்கிக் கைதுசெய்துள்ளனர். தமிழர்களைத் தொடர்ந்தும் அச்சுறுத்தி அவர்களின் இயல்பு வாழ்வினைக் குழப்பும் நோக்குடனேயே இந்த அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது.

யுத்தத்திற்குப் பின்னரான வடக்கின் அபிவிருத்தி என காப்பெற் வீதிகள் மட்டுமே இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

இம் மக்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்தி பொருளாதாரத்தினை மேம்படுத்த இந்த அரசாங்கம் எதையுமே செய்யவில்லை.

குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள், கைத்தொழில் பேட்டைகள் போன்ற எவையுமே வடக்கில் இன்னமும் அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் வேலை வாய்ப்புக்கள் இன்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இம் மக்களின் இயல்பு வாழ்வினை குழப்பும் நோக்குடன் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இதற்காகவே தமிழ் இளைஞர், யுவதிகளைக் கைதுசெய்கின்றனர்.

இதனால் வட பகுதித் தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனைத் தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email