SHARE

கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் புறக்கணிப்பு எச்சரிக்கைகளுக்கு மத்தியில், சிறிலங்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கான முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் நாள் தொடக்கம் 17ம் நாள் வரை கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா இன்று வெளியிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை 2013இல் சிறிலங்காவில் நடத்தும் முடிவு, கடந்த 2009இல் போட் ஒவ் ஸ்பெய்னில் எடுக்கப்பட்டது.

பின்னர், கடந்த அண்டு பேர்த்தில் நடந்த மாநாட்டில் இந்த முடிவு மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

அதேவேளை, சிறிலங்காவில் அடுத்த ஆண்டு கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையில் முன்னேற்றம் ஏற்படாது போனால், இந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் தமது முடிவில் மாற்றமில்லை என்று கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.

அதேவேளை, கனேடியப் பிரதமரை பின்பற்றி சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அறிவிக்க வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email