SHARE

சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரின் போது ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் குழுவின் அறிக்கை, ஐ.நாவினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற உயர் அதிகாரியை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்திருந்தார்.

கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இவருக்கு பணி ஆணை வழங்கிய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நான்கு மாதங்களில் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

எனினும், அவர் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அந்தப் பணியை செய்ய முடியாதுள்ளதாக அறிவித்ததை அடுத்து, சார்ள்ஸ் பெற்றி என்ற அதிகாரி இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டார்.

எனினும், குறிக்கப்பட்ட காலஎல்லை கடந்து, 9 மாதங்களாகிம் இந்த அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை.

இது குறித்து ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் கேட்டபோது,

“ தொராயா ஒபெய்ட்டினால் அறிக்கையை சமர்ப்பிக்க முடியவில்லை. இதனை அடுத்து மற்றொரு ஐ.நா அதிகாரியான சார்ள்ஸ் பெற்றி இந்த விவகாரத்தை கையாள்கிறார். விரைவில் அது வெளியிடப்படும்” என்று பதிலளித்தார்.

அதேவேளை, இந்த அறிக்கை இறுதி செய்யப்பட்டு விட்டதாக அறியப்படுவதாக இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

இன்னமும் இந்த அறிக்கை வெளியிடப்படாதுள்ள நிலையில், அது மறைக்கப்பட்டு விட்டதா என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கிடையே, இந்த அறிக்கையை தயார் செய்ய நியமிக்கப்பட்ட சார்ள்ஸ் பெற்றி ஐ.நாவின் விதிமுறைகளுக்கு முரணாக, ஒரே நேரத்தில் இரண்டு பணிகளை மேற்கொண்டதாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email