SHARE
image_pdfPRINT

தமிழர்களின் விடுதலைக்கான போராட்டம் இன்னமும் முடிவுபெறவில்லை. அவர்களின் ஆயுதங்களே மௌனிக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் எவ்வாறான ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகமே தீர்மானிக்க வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஐ.நா உதவி செயலாளர் அஜய் சில்பரிடம் யாழ்.சிவில் சமூகப் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இன்று யாழ். வந்த உதவிச் செயலாளரை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

யுத்ததின் பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் பெருமளவான அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவதாக அரசாங்கம் கூறிவருகின்றது. இதற்கு அரசாங்கத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றும் ஒரு சில தமிழ் அமைச்சர்களும் ஒத்து ஓதிவருகின்றனர்.

ஆனால் மக்கள் அபிவிருத்தியை விட அரசியல் தீர்வு ஒன்றையே எதிர்பார்க்கின்றனர். அபிவிருத்தி என்ற மாயையை தமிழ் மக்கள் விரும்பவில்லை அவர்கள் தமக்கான அரசியல் தீர்வையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

யுத்தம் முடிவு பெற்று விட்டது, அபிவிருத்தி நடைபெறுகின்றது என அரசாங்கம் கூறி வருகின்றது. தமிழர்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்கும் பேராட்டம் நிறைவு பெறவில்லை. அவர்களின் ஆயுதங்களே மௌனிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் எந்தவகையான ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகமே தீர்மானிக்க வேண்டும். தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.