SHARE

இனப்பிரச்சனைக்கு சாத்தியமான அரசியல் தீர்வு காணும்படி, புதுடெல்லியில் நடைபெறவுள்ள சந்திப்பின்போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்பதற்காக, மத்தியப் பிரதேச மாநில அரசின் அழைப்பின் பேரில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்று நாள் பயணமாக இன்று புதுடெல்லி செல்கிறார்.

இன்றிரவு புதுடெல்லியை சென்றடையும் அவருக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நாளை இராப்போசன விருந்தளிக்கவுள்ளார்.

இந்தத் தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பர்தீன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த இராப்போசன விருந்துடனான சந்திப்பின் போது, சிறிலங்காவில் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு குறித்த விவகாரங்கள் தொடர்பான இந்தியாவின் கரிசனைகள் குறித்து மன்மோகன்சிங் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் சிறிலங்காவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஐஏஎன்எஸ் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தனது இந்தியப் பயணத்தின் போது இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்கவுள்ளார்.

Print Friendly, PDF & Email