SHARE
image_pdfPRINT

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச பங்கெடுத்து கொள்ள அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வட அமெரிக்கத் தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

பொங்குதமிழ் எனச் சங்கே முழங்கு என்ற கொட்டொலியுடன் பொங்குதமிழ் எனும் கவனயீர்ப்பு எழுர்ச்சி நிகழ்வினை மேற்கொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் 26ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ள நிலையில், அதே நாளில் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு முன்னால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இப்பெருநிகழ்வு இடம்பெறவுள்ளது.

அன்று தமிழீழத் தாயக மக்கள் எழுர்ச்சியின் குறியீடாக அமைந்த பொங்குதமிழ் பெருநிகழ்வினை, தற்காலத்தில் சுதந்திர தமிழீழத்திற்கான சனநாயக போராட்டத்தின் குறீயீடாக விளங்குகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

உலகத் தமிழர்கள் பலரும் பங்கெடுத்துக் கொள்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் ‘இரத்தம் தோய்ந்த தமிழினப் படுகொலையின் முகத்தை’ உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கில் இக்கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெறுகின்றது.