SHARE

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்

இலங்கையின் வடக்கு, கிழக்கில் பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு கிழக்கு தீமோரில் பயன்படுத்திய வழிமுறையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை பின்பற்ற வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தமிழர்களுக்குத் தேவை தமிழர்களுக்கு உதவுகின்ற ஒரு அரசியலமைப்பே ஆகும் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 2,400 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், அவர்களது போராட்ட தளத்திற்கு முன்னால் இன்று (16.09.2023) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

குறித்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தினர் இந்த விடயத்தை கூறியுள்ளனர்.  

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 13வது திருத்தத்தை யாரேனும் விரும்பினால், இலங்கை நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும். 1987ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசியலமைப்பில் அங்கம் வகிக்கும் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோர வேண்டும்.

13ஆவது திருத்தம் நாட்டின் சட்டமாகும். எனவே எந்த அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்த மறுத்தால் அதனை விரும்பும் தமிழ் அரசியல்வாதிகள் நீதிமன்றத்தை நாடவேண்டும்.

இலங்கையின் நீதித்துறை அதனை நடைமுறைப்படுத்துவதில் தோல்வியடைந்தால், இலங்கை தனது சொந்த அரசியலமைப்பை மதித்து பின்பற்றவில்லை என்பதையே உலகிற்கு காட்டுகின்றது.

அத்துடன் தமிழர்களுக்குத் தேவை தமிழர்களுக்கு உதவுகின்ற ஒரு அரசியலமைப்பே ஆகும். சிங்கள அரசியலமைப்பு எமக்கு வேண்டாம். 13ஆவது திருத்தம் என்பது தமிழர்களின் அரசியல் தீர்வோ அல்லது தமிழர்களுக்கு உதவுவதற்காகவோ அல்ல. இந்தியர்கள் இலங்கை மீது வைத்த பொறி அது. இந்தியா எப்போது இலங்கை மீது படையெடுக்க விரும்புகிறதோ அல்லது இலங்கைக்கு வர நினைக்கிறதோ, அப்போதெல்லாம் 13ஆவது திருத்தம், அவர்களின் துரும்பாக இருக்கும். எனவே பாதிக்கப்பட்டவர்களாகிய நாங்கள், இலங்கையின் வடக்கு, கிழக்கில் சுதந்திர வாக்கெடுப்பு நடத்தவும், அதற்காகப் பிரச்சாரம் செய்யவும் ஐ.நா.வை கோருகிறோம்.

Print Friendly, PDF & Email