SHARE

பொங்கல் பொங்கி வழிபட தடை செய்ய இல்லை என்றும் எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் அதற்கு பாதகமாக நடக்க மாட்டோம் என தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று (08.08.2023) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பில் முன்னிலையாகிய ஆலய நிர்வாகத்தினர் மற்றும் வழக்கு தொடுனர்கள் சார்பான சட்டத்தரணி எஸ்.தனஞ்செயன் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், குருந்தூர்மலை வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது.

கடந்த தவணையிலே பொங்கல் உற்சவம் ஒன்றினை ஆதி ஐயனார் ஆலயத்திலே செய்ய முற்பட்டவேளை தொல்லியல் திணைக்களத்தினாலும், சகோதர மொழி பேசுபவர்களாலும் தடுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது.

நகர்த்தல் பத்திரம் ஊடாக அந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு நாங்கள் கொண்டுவந்தோம்.

அது தொடர்பில் பதிலளிப்பதற்கு தொல்லியல் திணைக்களத்திற்கு தவணை வழங்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் தொல்லியல் திணைக்களம் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக அரச சட்டத்தரணி ஊடாக பிரசன்னமாகியிருந்தார்கள்.

இதன்போது அவர்கள், தாம் எந்த விதத்திலும் அங்கே சைவ மக்கள் பொங்கல் பொங்கி வழிபட தடை செய்ய இல்லை என்றும், எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் அதற்கு பாதகமாக நடக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆலய பரிபாலனசபை சார்பாகவும், ஊர்மக்கள் சார்பாகவும், முல்லைத்தீவு மாவட்ட சட்டதரணிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆதிசிவன் ஐயனர் ஆலயம் சார்பாக இந்த வழக்கில் முன்னிலையாகி இருந்தனர்.

இது தொடர்பான மேலதிக கட்டளைக்காக வழக்கானது எதிர்வரும் (31.08.2023) திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email