SHARE

– முதன்முறையாக ஈழத் தமிழர்களை சந்திப்பதாக ஆதங்கம் –

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவின் சால்போர்ட் மற்றும் எக்கிள்ஸ் (Salford and Eccles) பாராளுமன்ற உறுப்பினரும், கல்வித் துறைக்கான நிழல் அமைச்சருமான (Hon. Rebbca Long Bailey M.P) அவர்களுடன் உயர்மட்ட சந்திப்பு ஒன்று வெள்ளிக்கிழமை (11/08/2023) மதியம் 12.00 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும்மனித உரிமைசெயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில், தொழில்கட்சிக்கான தமிழர்கள்(Tamils For Labour) அமைப்பின் தலைவர் திரு சென் கந்தையா, The Sri Lanka Campaign for Peace and Justice (SLC) அமைப்பின்
பிரச்சாரப் பணிப்பாளர் பென்ஜமின் குமார் மொறிஸ்(Benjamin Kumar Morris) மற்றும் இவோன் ஸ்கோபீல்ட் (Yvonne Schofield), இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச சட்ட மையம் (ICPPG) அமைப்பின் பிரதிநிதி திரு நிலக்ஐன் சிவலிங்கம், சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவரான அனுஷன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கீத் குலசேகரம் அவர்கள் உரையின் போது, இலங்கையின் ஆரம்பகால வரலாறு பற்றி எடுத்துரைத்தார். இலங்கையில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ்மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்ய போதுமான ஆதாரங்களை ஏற்கனவே ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் சமர்ப்பித்திருந்த போதும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு(FCDO) இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும்தெரிவித்தார். மேலும் தங்கள் தொகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக்கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

SLC அமைப்பின் சார்பில் இவோன் ஸ்கோபீல்ட் (Yvonne Schofield) உரையாற்றும் போது இலங்கையில் இடம்பெற்ற மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளிற்கு சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும் இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களிற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய திரு சென்கந்தையா அவர்கள், சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா,கனடா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்கா, கனடாவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார். இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்வதற்கு இதுவரை 50ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிய கோரிக்கைகளுக்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தை தருவதுடன், கடந்த 2010ம் ஆண்டிற்கு பிறகு வந்த எந்தவொரு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரும் தமிழர்களுடன் சந்திப்பு மேற்கொள்ளவில்லை எனவும் அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் தமிழர்களிற்கு சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்திதருமாறு கேட்டுக்கொண்டார்.

அனைவரின் கருத்துக்களையும் மிகவும் ஆர்வத்துடன் உள்வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர், இதுவே ஈழத்தமிழர்கள் தன்னை முதல் முறையாக சந்திப்பதாக தெரிவித்ததுடன், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலை பற்றி தனக்கு முதல் முறையாக எடுத்துவிளக்கியமைக்காக நன்றியும் தெரிவித்தார். அத்துடன் மிகவும் ஆர்வத்துடன் மேலதிக தகவல்களை கேட்டு அறிந்துகொண்டார்.

அனுசன் பாலசுப்பிரமணியம் உட்பட்டவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொண்டதுடன், தனது தொகுதியில் ஏராளமான தமிழ் மக்கள் வாழ்ந்து வரும்போதிலும் இன்றுவரை அவர்கள் தன்னை சந்திக்கவில்லை எனவும் வருத்தம் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு தனது முழுமையான ஆதரவை எப்போதும் இருக்கும் என்று உத்தரவாதம் அளித்தார்.
அத்துடன் திரு கீத் குலசேகரம் அவர்களால் முன்வைக்கப்பட்ட நான்கு கோரிக்கைகளுக்கும் தனது முழுமையான ஆதரவை வழங்க உத்தரவாதம் அளித்தார். அதன் அடிப்படையில் FCDO விற்கு தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி அழுத்தம் கொடுப்பதாகவும், பிரித்தானிய தமிழர்களிற்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்குழு (APPGT) மற்றும் மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாரளுமன்ற உறுப்பினர் குழுவிலும் (APPG for Magnitsky Sanctions) இணைவதாகவும் வாக்களித்தார். அத்துடன் யுத்தகுற்றவாளி சவேந்திர சில்வாவை தடை செய்ய கோரி பகிரங்க அறைகூவல் விடுக்கும் வீடியோ வெளியிடவும் சம்மதித்தார்.

மான்செஸ்டர் (Manchester) பகுதியில் பல தமிழர்கள் வாழ்ந்துவரும் நிலையிலும், பல தமிழ் அமைப்புகள் இயங்கிவரும் நிலையிலும் இன்றுவரை இவர்போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை இதுவரை சந்தித்து இலங்கை இனப்படுகொலை பற்றி எடுத்துரைக்காமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்கு உரிய விடயமாகும்.

Print Friendly, PDF & Email