SHARE

இராணுவம் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்

இரணைமடு குளத்தில் வாயில் துப்பாக்கி வைத்து இராணுவம் அச்சுறுத்துவதை சினிமா பாணியில் துப்பாக்கியை கடித்து உண்டிருக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் இழுவை மீன்பிடி முறையை கட்டுப்படுத்தி சட்ட ரீதியான மீன்பிடி முறைக்கு மட்டும் அனுமதி வழங்கல் தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இராணுவமும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் கட்டுப்படுத்த முற்பட்ட மீனவர்களை மேல் வெடி வைத்தும், வாயில் துப்பாக்கியை வைத்தும் அச்சுறுத்தியதாக மீனவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தை இன்றுதான் அறிய முடிவதாகவும், இவ்விடயம் தொடர்பில் படையினருக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும், அடுத்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இவ்விடயம் பேசப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபரிடம் அமைச்சர் பணித்தார்.

துப்பாக்கியை வாயில் வைத்து அச்சுறுத்திய போது சினிமாவில் நடப்பது போன்று துப்பாக்கியை சொக்கிலைட் உண்பது போல் கடித்து உண்டிருக்கலாம் என அமைச்சர் நகைச்சுவையாக தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட தொழில் முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும், அது தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களத்துடன் ஆலோசித்தே செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Print Friendly, PDF & Email