SHARE
David Lammy, MP, Portcullis House

டேவிட் லமி எம்பி (Rt.Hon. David Lammy MP)யுடன் இராஐதந்திர சந்திப்பு –

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவின் டொட்டனம் (Tottenham) பாராளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி விவகாரங்களுக்கான நிழல் செயலாளருமான (Shadow Secretary of State for Foreign, Commonwealth and Development Affairs) மதிப்பிற்குரிய டேவிட் லமி (Rt.Hon.David Lammy M.P) அவர்களுடன் இராஜதந்திர சந்திப்பு ஒன்று வெள்ளி (28/04/2023) மதியம் 12.30 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமைசெயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் REDRESS அமைப்பின் பணிப்பாளர் நட்டாலியா (Natalia Kubesch), இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் (ICPPG) பணிப்பாளர் திருமதி. அம்பிகை. க. செல்வகுமார், தொழில்கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour) அமைப்பின் தலைவர் திரு சென் கந்தையா மற்றும் ICPPG அமைப்பின் தொண்டரான திரு நிலக்ஐன் சிவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் இனப்படுகொலையின் நேரடி சாட்சியங்கள் மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களான றோய் ஐக்க்ஷான் யேசுதாசன், நிதர்சன் தவராசா, செல்வகுமாரி லோகநாதன், கதாதரன் நாகராஜா மற்றும் அனுஷன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு வரலாற்று ரீதியாக பிரித்தானியாவே பொறுப்பு என்பதை விளக்கி, தமிழ்மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமைப்பாட்டையும் எடுத்துரைத்தார். இலங்கையில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ்மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்ய போதுமான ஆதாரங்களை ஏற்கனவே ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் சமர்ப்பித்திருந்த போதும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு(FCDO) இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும்தெரிவித்தார். மேலும் தங்கள் தொகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக்கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதை
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா, கனடா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்கா, கனடாவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார்.

REDRESS அமைப்பு சார்பாக நட்டாலியா உரையாற்றும் போது இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களிற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்

தொடர்ந்து உரையாற்றிய திரு சென் கந்தையா அவர்கள், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்வதற்கு இதுவரை 50ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிய கோரிக்கைகளுக்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தை தருவதுடன், கடந்த 2010ம் ஆண்டிற்கு பிறகு வந்த எந்தவொரு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரும் தமிழர்களுடன் சந்திப்பு மேற்கொள்ளவில்லை எனவும் அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் தமிழர்களிற்கு சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்திதருமாறு கேட்டுக்கொண்டார்.

திருமதி அம்பிகைக செல்வகுமார் தனது உரையின் போது கடந்த ஒரு சில மாதங்களிற்கு முன்னர் சித்திரவதைக்கு உள்ளாகியவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களை ICPPG திரட்டிவைத்திருப்பதாகவும், சித்திரவதையில் தப்பிவந்தவர்களை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய வெளியுறவுத்துறை நிழல் செயலாளர் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் FCDO விற்கு தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி அழுத்தம் கொடுப்பதாகவும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்தி தர முயற்சிப்பதாகவும் கூறினார். அத்துடன் பிரித்தானிய பாராளுமன்றில் அடுத்த விவாதம் ஒன்றை கோருவதாகவும் வாக்களித்தார்.

Print Friendly, PDF & Email