SHARE

நாட்டின் தலைமையின் மீது இன்று நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளது என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக இன்று(வெள்ளிக்கிழமை) விசேட அஞ்சலி நிகழ்வும் திருப்பலி ஆராதனையும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், “தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களமும் பொலிஸாரும் தயக்கம் காட்டி, பகிரங்கமாக முதலைக் கண்ணீர் சிந்துகின்றனர். நேர்மையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்குவது வேதனையளிக்கின்றது.

அரச தரப்பின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையிலான இடைவெளி தெளிவாக புலப்படுகின்றது.

கத்தோலிக்க திருச்சபையுடன் நேர்மையான பேச்சுவார்த்தைக்கு தயார் என அண்மையில் அறிவித்த தற்போதைய ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் இரட்டைக் கொள்கையை கடைப்பிடிக்கின்றார்களா என்ற கேள்வி எனக்குள்ளது.

மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மனித மேன்மையையும் அழித்து, ஏகாதிபத்தியத்துடன் மக்களின் இறையாண்மையை எட்டி உதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்  நாட்டின் தலைமையின் மீது இன்று நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளது.“  எனத் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email