SHARE

யாழ்.மாநகர சபையில் சிலர் “வைக்கோல் பட்டறை நாய்” போல செயற்படுகின்றார்கள் என சக உறுப்பினர் கூறியதை கண்டித்து அவரை சபையில் இருந்து வெளியேற்றி அவரது ஒரு மாத சம்பளத்தையும் இரத்து செய்துள்ளனர்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம்(வியாழக்கிழமை) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, சபையில் உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி “சபையில் சிலரின் செயற்பாடுகள் வைக்கோல் பட்டறை நாய்” போன்றுள்ளது என கூறியிருந்தார்.

அதனால் சபையில் சில உறுப்பினர்கள் கடும் ஆவேசமடைந்து அமளியில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து “வைக்கோல் பட்டறை நாய்” என கூறிய உறுப்பினரை வெளியேற்றுமாறு முதல்வரை கோரினர்.

“நீங்கள் என்னை வெளியேற்ற தேவையில்லை.  நானே வெளியேறுகிறேன் ” என கூறி உறுப்பினர் சபையில் இருந்து வெளியேறி சென்றார்.

குறித்த உறுப்பினர் சபையில் கூறியது அநாகரீகமானது. அதனை சபை குறிப்பேட்டில் பதிய வேண்டும். சபை உறுப்பினர்களின் வேண்டுகோளினால், உறுப்பினர் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சபையில் அநாகரீகமான வார்த்தை பிரயோகித்தமையால், அவரது ஒரு மாத சம்பளத்தை இரத்து செய்வதுடன், இந்த மாதத்தில் சபையின் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அவர் அனுமதிக்கப்படமாட்டார் என சபையில் தீர்மானிக்கப்பட்டதாக முதல்வர் அறிவித்தார்.

Print Friendly, PDF & Email