தமிழர் தாயகம் உட்பட உலகில் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் இன்று மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கையின் வடக்கு- கிழக்கில் நீண்ட இடைவெளியின் பின்னர் இம்முறை மாவீர் துயிலுமில்லங்கள் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
அந்தவகையில் யாழில் தீவகம் சாட்டி, கோப்பாய், கொடிகாமம், உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லங்களிலும், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் வல்வெட்டித்துறை தீருவில் திடல் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில், கனகபுரம் விசுவமடு, முழங்காவில் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேராவில் உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும், வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்திலும் வணக்க வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவடிமுன்மாரி, தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும், தாண்டியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பகுதியிலும் வணக்க நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் அம்பாறையில் கஞ்சிகுடியாறு துயிலுமில்லத்திலும், திருகோணமலையில் ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதேவேளை, பிரித்தானியா அவுஸ்திரேலியா பிரான்ஸ் சுவிஸ் கனடா அமெரிக்கா உட்பட தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
நல்லூர்
யாழ்.பல்கலைக்கழகம்
கிளிநொச்சி கனகபுரம்
முள்ளியவளை
தாண்டியடி
ஆலங்குளம்
முல்லைத்தீவு
திருகோணமலை