SHARE

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ஐ. சி. சி) இலங்கையை பாரப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ. நா.) பாதுகாப்பு சபையை தூண்டுமாறு வலியுறுத்தி மனித உரிமைகள் பேரவையின் இணைத் தலைமை நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு தமிழ்த் தரப்புகள் ஒன்றாகக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இந்தக் கடிதத்தில், ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புகள் எனப் பல தரப்பினர் கையொப்பமிட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வந்த பிரேரணைகளை இலங்கை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது. எனவே, மேலும் கால அவகாசங்களை வழங்குவது அர்த்தமற்றது. ஐ. நா. பாதுகாப்பு சபையில் சீனா தனது ‘வீற்றோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தும் என்ற வாதம் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியா என்று உலகின் பல தரப்பினரும் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.

இந்தக் கருத்துக்கள் ஆதரமற்றவை. இலங்கையை விட சீனாவோடு மிக நெருக்கமாக இருந்த சூடான் நாட்டை ஐ. நா. பாதுகாப்பு சபை ஊடாக மனித உரிமைகள் மீறல்களுக்காக ஐ. சி. சியில் பாரப்படுத்தியபோது அதற்கு எதிராக எந்தநாடும் வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. இதேபோன்று வட கொரியாவையும் ஐ. சி. சியில் பாராப்படுத்துவதற்கான விடயமும் ஐ. நா. பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு இழைக்கப்பட்ட போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் அட்டூழிய குற்றங்களுக்காக நீண்டகாலமாக தமிழ் மக்கள் கோரி நிற்கும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு மனித உரிமைகள் பேரவை மேற்குறிப்பிட்ட உண்மைகளின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதற்கு பாதுகாப்புச் சபையை தூண்டுவதற்கான பிரேரணையை நிறைவேற்ற வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email