SHARE

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டதாக சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான ஜனாதிபதி செயலணியை திரும்பப் பெறுவதற்கும் அவர் இணங்கியதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பிற்கு முன்னர் அவர் இந்த உறுதிமொழியை தனக்கு வழங்கியிருந்ததாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தனது கோரிக்கையில் சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதே முதன்மையான கோரிக்கை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இது தொடர்பாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் வினவியபோது, இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த பணிக்காக நியமிக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.

செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா.கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக மிகவும் கடினமாக தீர்மானங்கள் முன்வைக்கப்படும் என்பதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவற்றுக்கு தீர்வை வழங்குவர் என நம்புவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email