SHARE

முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கை களையும் ஏற்றுக்கொண்டார்

சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை, யுத்த குற்றங்கள் மற்றும் தொடரும் சித்திரவதைகளுக்கு காரணமானவர்களில் முக்கியமானவரான, இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை, உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanctions Regime 2020) பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கிலும், பிரித்தானியா அரசுக்கு அழுத்தத்தை வழங்குமாறும் கோரி, மற்றும் ஒரு இராஜதந்திர சந்திப்பு பிரித்தானியாவின் லீவிஸ் (Lewes) பகுதிக்கான, பழமைவாத கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய மரியா கவுபீல்டு எம்.பி (Maria Caulfield MP) அவர்களுடன் இடம்பெற்றுள்ளது.

திங்கட்கிழமை 11 July 2022 அன்று சாயங்காலம் 5 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்ற இந்த சந்திப்பு, முதன்மை செயற்பாட்டாளரான திரு. விஜய் விவேகானந்தன் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது. மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்ட ஆலோசகருமான திரு கீத் குலசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பிரித்தானிய பழமைவாத கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் (BTC) அமைப்பின் செயலாளரான, திரு. கஜன் ராஜ் அவர்களும் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டார்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது உரையி்ன் போது, இறுதியுத்தத்தில் ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் கொல்லப்பட்ட போது 58 ஆவது இராணுவ படைப்பிரிவிற்கு சவேந்திர சில்வாவே தலைமை தாங்கியிருந்தார் என்பதையும் இவரது கட்டளையின் கீழே வைத்தியசாலைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றதற்கான ஆதராங்களை ITJP என்ற அமைப்பு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு (FCDO) சமர்ப்பித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரண்டைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலைசெய்யப்படவில்லை என்ற விடயங்களையும் எடுத்துக்கூறினார். காணாமல் ஆக்கப்பட்டோரின். பெற்றோர் மற்றும் உறவினர்கள் காணாமல் போன தமது பிள்ளைகளின் புகைப்படங்களுடன் இன்றும் தமது வீதிகளில் போராட்டம் செய்தும் இன்றுவரையில் எந்த நீதியும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி தேவை என்பதை என்பதை எடுத்துரைத்தார்.

மேலும், சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களான சிவலிங்கம் நிலக்ஜன், நோய்வாய்ப்பட்ட தனது பாட்டியைப் பார்ப்பதற்காக இலங்கை சென்றபோது, இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக நிதி சேகரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவற்றை விட கடந்த இருவருடங்களுக்குள் சித்திரவதைக்கு உள்ளான 200 பேரின் ஆதாரங்களை ICPPG பிரித்தானிய அரசுக்கு வழங்கியிருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது மிகவும் ஏமாற்றமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். பிரித்தானியாவே இலங்கையில் இனப்பிரச்சனைக்கு வித்திட்ட காரணத்தாலும், தொடர்ந்து இராணுவ ஆயிதங்களையும் பயிற்சியையுத் வழங்கி வருவதாலும், தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது என்றும் கீத் குலசேகரம் வலியுறுத்தினார்.

சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்காவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார்.

திரு. கஜன் ராஜ் அவர்கள் பேசுகையில், அவர் அனைத்து தகவல்களையும் தொகுத்து, கடந்த சில ஆண்டுகளாக பழமைவாதக் கட்சியின் ஆணையில் இருந்ததை சுட்டிக்காட்டினார். அத்துடன் தமிழருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவில் (APPG) சேருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

திரு. கீத் குலசேகரம் தனது தொகுப்புரையின் போது, மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். தமிழருக்காற அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவில் (APPGT) மற்றும் மக்னெட் ஸ்கை (Magnet sky) தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு என்பவற்றில் இணைந்து கொள்ளுமாறும், இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை இதுவரை தடைசெய்யாமைக்கு பிரித்தானி வெளிவிவகார அமைச்சிடம் (FCDO) விளக்கம் கோரி கடிதம் எழுதுமாறும், பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து, அவருடைய கட்டளையின் கீழ் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதைப் பற்றி அவர்கள் கூறுவதைக் கேட்குமாறும் மீண்டும் கேட்டுக் கொண்டார். அத்துடன் பிரச்சாரத்திற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடியோ பிரச்சாரத்தில் சேரும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், இலங்கை இறுதி யுத்தத்தின் சாட்சியங்களாக வாழ்பவர்கள், சித்திரவதையில் தப்பித்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விஜய் விவேகானந்தன், பிரசன்னா பாலச்சந்திரன், அஜிபன் ராஜ் ஜெயேந்திரன், சிதசுப்பிரமணியம் திருச்செந்திநாதன், விதுர விவேகானந்தன் கலந்து கொண்டனர்.

தங்கள் அனுவபங்களை பகிர்ந்துகொண்டதுடன், சவேந்திர சில்வா கடந்த கால யுத்த குற்றங்களுக்கு மட்டுமன்றி, தொடரும் சித்திரவதைகளுக்கும் காரணமாக இருப்பதால், உடனடியாக அவரை தடைசெய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பிரித்தானிய அரசு நியாயம் வழங்கும் விடயத்தில் உண்மையாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இவற்றை மிகவும் ஆர்வத்துடன் கேட்டு, கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் மரிய கால்பீல்ட் எம்.பி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினார். கூட்டத்தில் பங்கேற்ற திரு.கீத் குலசேகரம் மற்றும் திரு.கஜன் ராஜ் மற்றும் பாதிக்கப்பட்ட பிறரைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை தடைசெய்வது குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பை நடத்துமாறும் பிரித்தானி வெளிவிவகார அமைச்சுக்கு (FCDO) கடிதம் எழுதவுள்ளதாக தெரிவித்தார். அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுக்களில் (APPG) தானும் இணைவதாகவும் உத்தரவாதம் அளித்தார்.

பிரித்தானியா வாழ் தமிழர்கள், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களும் இளம் தலைமுறையினர் இந்த முயற்சியை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email