SHARE

சிங்கள இளைஞர்கள் யுவதிகள் தங்களது பிரச்சினைகளை முன்னிறுத்தி போராடும்போது அதில் தமிழ் இளைஞர்கள் பங்குபற்றுவதனால் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் என்பதை தெரிந்துகொண்டுதான்போராடவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினை வீட்டுக்கு செல்லுமாறு கோரி கடந்த எட்டு தினங்களாக காலிமுகத்திடலில் சிங்கள இளையோரினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும், ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகவேண்டும் உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நாடு இன்று பொருளாதார ரீதியாக அதாளபாதாளத்திற்குச் சென்றுள்ளது. எவர் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பொருளாதாரத்தினை தூக்கி நிமிர்த்தக்கூடிய நிலையில்லை. இந்தநிலை எவ்வாறு ஏற்பட்டது என்பதன் தர்ப்பரியம் தெரியாமல் இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது என்று நான் நினைக்கின்றேன்.

இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் அடக்கி ஒடுக்கப்பட்டபோது அகிம்சை ரீதியான போராட்டங்கள் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாற்றம்பெற்றபோது தமிழ் மக்கள் மீதான யுத்ததிற்காக இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சிசெய்த அரசுகள் பில்லியன் கணக்கான டொலர்களை செலவு செய்ததே முதல்காரணமாகும்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டபோது இந்த நாட்டில் ஒரு அரசியல் தீர்வு காணப்பட்டிருந்தால் மாறிமாறி வந்த அரசுகள் இந்தளவுக்கு யுத்ததிற்கு டொலர்களை செலவிடவேண்டிய தேவையேற்பட்டிருக்காது.

தற்போதுகூட சிங்கள இளையோர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டமானது தாங்கள் முன்வைத்துள்ள ஐந்து கோரிக்கைகளில் முதலாவதாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வரும் அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கவேண்டும் என்பது எனது கருத்தாகும்.

பண்டாரநாயக்க தலைமையிலான ஆட்சி சிங்கள மட்டும் சட்டத்தினை கொண்டுவந்தபோது தமது மொழி உரிமைக்காக இதே காலி முகத்திடலில் ஜுன் மாதம் 05ஆம் திகதி தமிழ் தலைமைகள் சத்தியாக்கிரக போராட்டம்செய்தார்கள்.

அப்போராட்டத்தின்போது சிங்கள காடையர்கள் ஏவிவிடப்பட்டு தமிழ் தலைமைகளின் மண்டைகள் உடைக்கப்பட்டதுடன் காதுகள் கடித்து துப்பப்பட்ட வரலாறுகள் எங்களுக்கு தெரியும்.

தமிழ் மக்கள் தற்போதுள்ள நிலையில் இந்த போராட்டத்தினை நாங்கள் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றோம் என்பதை சற்று சிந்திக்கவேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டபோது தமது உறவுகளை ஒப்படைத்த காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சொந்தங்கள் 1800 நாட்களையும் தாண்டி வடகிழக்கில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

சிங்கள இளைஞர்களின் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இன்று ஒரு சில தமிழ் தலைமைகள் அறைகூவல் விடுக்கின்றனர். இவ்வாறு அறைகூவல் விடுக்கும் அந்த பிரதிநிதிகள் வடகிழக்கில் தமது உறவுகளை தேடி போராடும் போராட்டத்திற்கு இளைஞர் யுவதிகளை ஒருங்கிணைப்பதற்கு எந்தவித அக்கரையும் அற்றவர்களாகவேயிருந்தனர்.

நாங்கள் பாதிக்கப்பட்ட சமூகம். யுத்ததினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தினால் இன்று மின்சாரத்திற்கும் எரிபொருளுக்கும் பால்மாவுக்கும் போராடுகின்றார்களே தவிர இந்த பொருளாதார பின்னடைவு ஏற்பட்டதற்கான காரணத்தினை கண்டறிந்து அதனை நிவர்த்திப்பதற்கான எந்த முயற்சியும் காட்டப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email