SHARE

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்திபன் கூறிய வார்த்தைகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடளுமன்றில் நேற்று தெரிவித்திருந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் உள்ளவர்களை மட்டுமல்ல, தெற்கிலும் உள்ளவர்களையும் ஒடுக்கும் என்று திலீபன் அன்று கூறியது தற்போதும் நினைவிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

மேலும் இந்தச் சட்டம் இறுதியில் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்பதை அவரது தியாகம் தங்களிடம் கூறியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அறப்போராட்டத்தின் வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்த அவர், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு  மரணத்தை தழுவிக்கொண்டார்.

இதேவேளை பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நேற்று திருத்தங்களுடன் நிறைவேறியது.

குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன.

இதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் திலீபன் ஆகியோர் ஆதரவாக வழக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email