SHARE

இன்று(சனிக்கிழமை) இரவு வெளியாகும் பி.சி.ஆர். முடிவின் படியே மருதனார்மடம் சந்தையை  மூடுவதா? அல்லது உடுவில்  பகுதியை முடக்குவதா? என தீர்மானிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வடக்கு மாகாணத்தில் மூவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் இருவர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் உடுவில் பிரதேச செயலகத்திற்கு அண்மையில் வசித்துவருபவர்.

உடுவில் பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில்  முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அவர் மருதனார்மடம் சந்தையில் மரக்கறி கடை ஒன்றையும் வைத்திருப்பதாகவும் அத்தோடு முச்சக்கர வண்டி சாரதிகள் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவரது முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மற்றும் அவருடைய கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிவர்கள் தாமாக முன்வந்து தங்களை உடுவில் சுகாதார பிரிவினரிடம்  பதிவு செய்து  பிசிஆர் பரிசோதனை  மேற்கொள்ள வேண்டும்.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் அப்பகுதி சுகாதார பரிசோதகர், பொதுச்சுகாதார பரிசோதகரிடம் தங்களுடைய விவரங்களை பதிவு செய்வதன் மூலம் தொற்று பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.

 இன்றைய தினம் 350 பேருக்கு  பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பிசிஆர் பரிசோதனை  முடிவுகள் இரவுவெளியாக உள்ளன.

அந்த முடிவுகளின் அடிப்படையில் மருதனார்மட சந்தையை  மூடுவதா அல்லது உடுவில் பகுதியை முடக்குவதா என தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email