SHARE

சர்வதேச மன்னிப்பு சபை

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க இலங்கை அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதீட்டை இலங்கை அரசாங்கம் இன்று சமர்ப்பிக்க உள்ள நிலையில் சர்வதேச மன்னிப்பு சபை நேற்றைய தினம் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு இடைக்கால நீதி நடைமுறைக்கு வழிவகுத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில் இருந்து கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கம் விலகிக்கொண்டது.

இதனையடுத்து காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் கரிசனை ஏற்பட்டுள்ளதாக மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இவற்றுக்கான பாதீடு மீண்டும் அறவிடப்படலாம் என்றும் மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

மோதலினால் மோசமாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உறவினர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்கள், அவர்கள் நீண்டகாலமாக போராடிய உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கு இந்த இரண்டு அலுவலகங்களும் பொறிமுறைகளாக இருந்தன.

எனவே நாட்டின் வரலாற்றில் இந்த இருண்ட காலத்தின் அத்தியாயத்தை மூடுவதற்கு இரு நிறுவனங்களும் திறம்பட செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் அலுவலக பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email