SHARE

இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னர் கூறப்பட்ட ஜூன் 30 ம் திகதி என்ற கால எல்லைக்குள் பூர்த்தியாக முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மீள்குடியேற்ற துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்ற போதிலும் அவற்றை பூர்த்தி செய்ய மேலும் சிறிது காலம் தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.நிலக்கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாத காரணத்தினாலும், இராணுவ முகாம்களுக்காக இடங்கள் எடுக்கப்படும் பட்சத்தில் அதற்குப் பதிலாக வேறு இடங்களை அடையாளம் கண்டு மக்களை அங்கு குடியேற்ற வேண்டியுள்ளதாலும் இந்த சிறிய தாமதம் ஏற்படுவதாக அமைச்சர் கூறினார்.

இருந்தபோதிலும், அதற்கு பல மாதகாலம் பிடிக்கும் என்று கூறப்படுவது தவறு என்றும் அவர் குறிப்பிட்டார்.குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில், இறுதிப் போர் நடந்த பகுதிகளில் அதிக அளவிலான கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளதாகக் கூறிய அமைச்சர் முரளிதரன், அங்கு விரைவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீளக் குடியேற்றப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email