SHARE

இலங்கையின் அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் அகற்றப்படாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக தலைவர் பசில் ராஜபக்ஷவும் உறுதியளித்துள்ளனரென அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உறுதியளித்தமையினால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத்தேர்தல் ஆகியவற்றுக்கு எமது கட்சி அவர்களுக்கு ஆதரவை வழங்கியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக விக்கினேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது,  “அண்மைகாலமாக சில தரப்பினர், 13ஆம் திருத்தச்சட்டம் நீக்கப்படும் எனவும் மறுசீரமைக்கப்படும் எனவும் வெவ்வேறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும்,  இவ்வாறு கருத்து வெளியிடுபவர்கள் அனைவரும் அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவே உள்ளமையினால் இந்த விடயத்தில் முக்கிய அவதானம் செலுத்த வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

அதாவது 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்படும்போதே அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் பற்றி அடுத்தகட்ட பேச்சுக்களை  முன்னெடுக்க முடியும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

மேலும்,  ஜனாதிபதி வேட்பாளரை பொதுஜன பெரமுன தெரிவு செய்வதற்கு முன்னரே எமது ஆதரவை எத்தகையானவருக்கு வழங்வோம் என்பது பற்றி தெளிவாக  அறிவித்திருந்தோம்.

நாம் கடந்த  ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்தோம். குறித்த சந்திப்பின்போது, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,  பவித்திரா வன்னியாராச்சி மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோரும்  உடன் இருந்தனர்.

இதன்போது நானும், கோபால கிருஷ்ணனும் 13ஆவது திருத்தச்சட்டத்திலிருந்து ஆரம்பித்து அடுத்தகட்டம் தொடர்பில் சிந்திக்கும் வேட்பாளருக்கு நாம் ஆதரவளிப்பதாக கூறினோம்.

அதற்கு பசில் ராஜபக்ஷ,  தங்களுடைய தரப்பில் யார் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் 13 ஆவது திருத்தம் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தார்.

ஆகவேதான் நாம் பொதுஜன பெரமுனவுக்கு முழுமையான ஆதரவினை வழங்கினோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email