SHARE

இலங்கை அரச படையினருக்கு எதிரான யுத்த்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர்களின் படங்களை பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் கொழுவுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கிளிநொச்சி மாவட்ட தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் தெரிவித்தார்.

இன்று முறிகண்டியில் நிலப்பிரச்சினை தொடர்பான சந்திப்பில் அப்பகுதி மக்கள் மத்தியில் உரையாற்றிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இராணுவத்தினர் சில மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தனர் என்றும் அந்த வீடுகளுக்கு குடியேறிய மக்கள் முதன் முதலில் ஆணிகளை அடித்து சில படங்களை கொழுவினார்கள் என்று கிளிநொச்சி மாவட்ட தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் குறிப்பிட்டார்.

அந்தப் படங்கள் யாருடையவை தெரியுமா என்று கேட்ட இராணுவத்தளபதி அவைகள் அரச படைகளுக்கு எதிராக யுத்தம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரிச்சீருடை அணிந்த மாவீரர்களின் படங்கள் என்றார்.

அவர்கள் எங்களுக்கு எதிராக யுத்தம் செய்த பொழுதும் அவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள் என்பதை எப்படி மறுப்பது என்று குறிப்பிட்ட பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் அதனை எந்த இராணுவ உறுப்பினரும் தடுக்க கூடாது என்று தான் உத்தரவிட்டதாக தெரிவித்தார்.

 

Print Friendly, PDF & Email