SHARE

இலங்கையில் கருத்து சுதந்திரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் வெளியிட்ட கருத்துக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளிற்கான பதில் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி டயானி மென்டிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர், கொவிட் 19 சூழலில் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறும் நாடுகளில் இலங்கையும் உள்ளது என தெரிவித்துள்ளமை குறித்து கரிசனை வெளியிட்டுள்ளார்.

பொதுமக்களை பாதுகாப்பதற்காக பிழையான போலியான தகவல்களிற்கு எதிராக பதில் நடவடிக்கை எடுக்கவேண்டியது அனைத்து நாடுகளுக்கும் அரசாங்கங்களிற்கும் அவசியமான விடயமாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக கொரோனா வைரஸ் சூழலில் இது அவசியமானதாக மாறியுள்ளது என டயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா நெருக்கடி காலப்பகுதியில் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுத்தல் தொடர்பாக அனைத்து நாடுகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகள், குறிப்பிட்ட அளவில் பேணப்படவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இலங்கையில், கொவிட் – 19 தொடர்பான அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுதல், உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என, பதில் பொலிஸ்மா அதிபரால் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை ஏப்ரல் 25ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் பொலிஸ் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், அரசாங்கத்தை விமர்சிப்பதன் அடிப்படையில், எவராவது கைது செய்யப்பட்டால் அது அரசியல் யாப்புக்கு எதிரான செயற்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் எனினும் இலங்கையில் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் கொவிட் – 19 நெருக்கடியை அடுத்து, அரசாங்கத்தின் பதிலை விமர்சிக்கும் நபர்களை தன்னிச்சையாக கைதுசெய்து தடுத்து வைப்பது அல்லது தொற்று பற்றிய தகவல்கள் அல்லது கருத்துக்களைப் பகிர்வது ஆகியவற்றை மேலும் கட்டுப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அல்லது தவறான தகவல்களை பரப்பியதாக பங்களாதேஷ், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், நேபாளம்,  பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஒரு நிலையற்ற காலகட்டத்தில் தவறான தகவல்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அந்த அறிக்கையில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email