SHARE

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த பெண்ணொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த கருணாகரன் உமாசங்கரி (வயது – 22) என்ற பெண்ணே இன்று (வியாழக்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதணைகளின் பின்னர் நாளை மட்டக்களப்புக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

இவரின் உயிரிழப்பையடுத்து, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரபல நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

அத்தோடு 500இற்கும் மேற்பட்டோர் அவயங்களை இழந்தும் படுகாயங்களுக்கு உள்ளாகியும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தாக்குதல்கள் இடம்பெற்று 2 மாதங்கள் கழிந்துவிட்டன. ஆனால் அன்றைய தினம் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்களின் உயிரிழப்புகளின் எனண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

Print Friendly, PDF & Email