SHARE

மனக்குழப்பத்தில் இருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது மனக்குழப்பத்தை நீக்கி சரியான பதில் ஒன்றை தெரிவிப்பாராக இருந்தால், அதன் பின்னர் அடுத்த மாகாணசபை தேர்தல் குறித்து கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை  வெளிப்படுத்தும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பருத்துறையில் உள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம்

அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்  குறித்தே கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை. நேற்று முன்தினம் முதலமைச்சர் உரையாற்றும்போது தன் முன் மூன்று தெரிவுகள் முன்னர் இருந்ததாகவும்,  தற்போது நான்கு தெரிவுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆகவே நாட்கள் செல்ல.. செல்ல.. தெரிவுகளின் எண்ணிக்கை உயரும் வாய்ப்புக்கள் உள்ளது. அவருடைய மனக்குழப்பங்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல.

ஆகவே அவர் தனது மனக்குழப்பம் தெளிந்து, தெளிவான ஒரு தெரிவினை கூறியதன் பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்.

நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் முதலமைச்சர் தான் சார்ந்த கட்சிக்கு எதிராக செயற்பட்டதனை வெளிப்படையாக கண்டித்தவன் நான். அப்போது நான் பேசியது தவறு என கூறியவர்கள் இப்போது நான் கூறியது அனைத்தும் சரியென கூறுகிறார்கள்.

மாகாணசபை தேர்தல் காலத்தில் தான் போட்டியிடும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என கேட்ட முதலமைச்சர் நாடாளுமன்ற தேர்தலில் வீட்டைவிட்டு வெளியேறி வாக்களியுங்கள் என கூறியவர் இனியும் கட்சிக்குள் இருப்பதற்கு தகுதியற்றவர். எனவே தமிழ் மக்களுடைய சுயமரியாதைக்காக போராடும் கட்சி தனது சுயமரியாதையை இழக்க முடியாது. என மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email