SHARE

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் பேசியது சட்டவிரோதம் என்றால் அன்று ஞானசார தேரர் பிரபாகரன் குறித்து என்னிடம் கூறியதும் சட்டவிரோதமே என ‍தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நல்லவவர், வல்லவர், அவரை நாம் அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம். உண்மையில் அவர் இன்னமும் உயிருடன் இருந்திருக்க வேண்டும். இன்று இந்நாட்டில் உள்ள பல பிரபல சிங்கள அரசியல் தலைவர்களை விட பிரபாகரன் சிறந்தவர்.

பிரபாகரன் கொண்ட கொள்கையில் நேர்மையாக இருந்தார். இன்றுள்ள பல சிங்கள அரசியல்வாதிகள், கொண்ட கொள்கைக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்பவர்கள் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரே இந்த கருத்தினை பகிரங்கமாக ஊடகங்களின் முன்னால் வந்து என்னிடம் நேரடியாக சொன்னார்.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் சீர்குலைந்துள்ள சட்டம், ஒழுங்கு நிலைமையை கண்டித்து ஒரு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தன் கோபத்தை வெளிப்படுத்திய விஜயகலா மகேஸ்வரனை மாத்திரம் விமர்சிப்பது ஏன்? புலிகள் இயக்கம் தடை செய்யபட்டுள்ளதால், அதைப்பற்றி விஜயகலா பேசுவது சட்டவிரோதம் என கூறலாம். அப்படியானால், அன்று ஞானசாரர் கூறியதும் சட்ட விரோதம் அல்லவா?

விஜயகலா மகேஸ்வரன் தன் கருத்தை சொல்வதற்கு சரியான சொற்களை பயன்படுத்த தவறியிருக்கலாம். ஒரு இராஜாங்க அமைச்சராக அவரது கருத்தில் உரிய முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது கோபம் மிகவும் நேர்மையானது.

அத்துடன் இன்று யாழில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது, சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறார்கள், போதை வஸ்து கலாசாரம் தலை விரித்து ஆடுகிறது. சினிமா பாணி வாள்வீச்சு நடக்கிறது. இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு அடக்க பொலிஸார் தவறி விட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

Print Friendly, PDF & Email