SHARE

கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞரை வைத்தியசாலையில் சேர்த்த முச்சக்கர வண்டி சாரதியை போத்தலால் குத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெல்லியடி பகுதியில் குறித்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கரணவாய் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது , அங்கிருந்த இளைஞர் ஒருவர் மீது இனம் தெரியாத குழுவினர் தாக்குதல் மேற்கொண்டு கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினார்கள்.

அதனை அடுத்து அங்கிருந்த முச்சக்கர வண்டி சாரதி காயப்பட்ட இளைஞரை தனது முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்று மந்திகை ஆதார வைத்தியசாலையில்  சேர்த்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிசார் , இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்த சாரதியை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை  பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்திருந்தனர்.

விசாரணைக்கு பொலிஸ் நிலையம் செல்லும் போது நெல்லியடி பகுதியில் இனம் தெரியாத கும்பல் முச்சக்கர வண்டியை வழிமறித்து , தாக்குதல் மேற்கொண்டதுடன், சாரதி மீது கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொண்டு உடைந்த போத்தலால் குத்தி காயப்படுத்தி விட்டுதப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email