SHARE

கைதானவர் திடுக்கிடும் வாக்குமூலம்; எரிக்கப்பட்டு எஞ்சிய நிலையில் உடலங்கள் மீட்ப்பு 

வுனியா, நெடுங்கேணி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் காணாமல் போன இளைஞன் கடத்தப்பட்டு, சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நெடுங்கேணி சேனைப்பிலவை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர் காணாமல் போயிருந்தார். உறவினர்கள் பல இடங்களிலும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர்.

இதையடுத்து விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். காணாமல் போன இளைஞனை கடத்தி சென்று கொலை செய்து, எரித்து விட்டோம் என வாக்குமூலமளித்தார். ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு குளத்தின் அலைகரை பகுதியில் கொலை செய்து எரிக்கப்பட்டதாக வாக்குமூலமளித்தார்.

ஒட்டுசுட்டான், நெடுங்கேணி  பொலிசார் இணைந்து நேற்று சந்தேகநபரையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றனர். கொலை செய்து, சடலத்தை எரித்த இடத்தை அவர் காண்பித்தார். எரிக்கப்பட்டு எஞ்சிய நிலையில் மனித உடலின் எச்சங்கள் அங்கு மீட்கப்பட்டன.

Print Friendly, PDF & Email