வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனின் உரைகளின் தொகுப்பான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் சிறப்பு உரையாற்றுகிறார்.
அத்துடன், தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்று சிறப்பு உரையாற்றுகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், பதவிக்கு வந்த பின், ஆற்றிய உரைகளின் தொகுப்பு ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூலாக நாளை (24) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்படுகிறது.
இந்த வெளியீட்டு நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசின் சட்ட ஆலோசகராக கடமையாற்றியவரும் சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியருமான முத்துக்குமாரசாமி சுவர்ணராஜா பிரதம விருந்தினராக கலந்துகொள்கிறார்.