SHARE
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர் கடல் அட்டை பிடிக்கும் தொழிலை கால அவகாசம் வழங்காது உடனடியாக தடைசெய்ய வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பல தரப்பினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அதில் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில், தென்பகுதி மீனவர்கள்  கடல் அட்டை பிடிக்கும் தொழில் செய்வதனால்,  உள்ளுர் மீனவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறர்கள். குறித்த தொழிலை  தடைசெய்ய வேண்டும் என்றும் அதை மீறி தொடர்சியாக இத்தொழிலை மேற்கொண்டால்  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் கேட்டுக்கொண்டார்.
அதற்கமைய அப்பகுதியின் தற்போதைய நிலை தொடர்பாக மருதங்கேணி பிரதேச செயலர் கருத்து தெரிவிக்கையில்,
வடமராட்சி கிழக்கில் 1500 மீனவர் வாடி அமைத்து தொழில் செய்கிறார்கள். கடல் அட்டை அனுமதி  கடற்தொழில் நீரியில் வளத்துறை பணிப்பாளரால்  வழங்கப்பட்டு உள்ளது. நிபந்தனை அடிப்படையில் வழங்கப்படுகிறது, அதாவது 5 கிலோ மீற்றருக்கு அப்பால் கடலில் அட்டை பிடிக்க வேண்டும்.  இரவில் பிடிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி தங்கி உள்ளார்கள். 
ஆனால்  தங்கி நின்று வாடி அமைத்து தொழில் செய்வது அந்தந்த  பிரதேச செயலரால் தான் அனுமதி வழங்கப்பட வேண்டும். நான் அனுமதி வழங்கவில்லை. ஆனால் தனிப்பட்டவர்கள் மற்றும் சில மீனவ சங்கங்கள் அனுமதி கடிதத்தை கொடுக்கிறார்கள். பணத்தினை பெற்று அனுமதி கொடுக்கிறார்கள் அந்த வகையில் ஏராளமானவர்கள் தற்போது தங்கியுள்ளார்கள்.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் முறையற்ற முறையில் செயற்படுவதால் பல்வேறு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  உள்ளுர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே  அப்பகுதியை விட்டு வெளியேற 30 நாட்கள்  அவகாசம் கொடுத்துள்ளோம் அதன் பின்னர்  நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இது கட்டாயம்  தடுக்கப்பட வேண்டிய விடயம் என தெரிவித்தார்
ஒரு கிழமைக்குள் வெளியேற்றுங்கள். 
30 நாள் அவகாசம் வழங்கத் தேவையில்லை ஒரு கிழமை கால அவகாசம் கொடுத்து அவர்களை வெளியேற்ற வேண்டும்.அத்துடன்  தனிநபர் கடிதங்களை ஏற்றுக்கொள்ளமால் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
சட்ட நடவடிக்கை எடுப்போம். 
மேலும் கடற்தொழில் நீரியல் வளத்துறை உத்தியோகத்தார். கடல் அட்டை பிடிப்பதற்கான அனுமதி கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்பட்டு வருகிறது.
வடமராட்சி கிழக்கு பகுதியில் தங்கி நின்று பிடிக்கும் செயற்பாட்டை செய்யவில்லை, தற்போது தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். நாம் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
அண்மைக்காலமாக அப்பகுதி மக்கள் யாருடைய அனுமதியும் இல்லாமல் தமது சொந்த காணிகளை அவர்களிடம் கொடுத்துள்ளார்கள். தற்போது 6 பேர் தமது காணிகளை கொடுத்துள்ளார்கள். அத்துடன் 2 மீனவ சங்கங்கள் அனுமதி வழங்கியுள்ளன.
எமது மீனவர்களுக்கு பயிற்சி இல்லை. 
அதனால் தான் தங்கி நின்று தொழில் செய்கிறார்கள்.
எமது பகுதி மீனவர்களுக்கு குறித்த தொழில் தொடர்பான  பொறிமுறையை கற்பித்து இந்த தொழிலை செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அப்போது தென்னிலங்கையில் இருந்து வருபவர்கள் தடுக்கப்படலாம் எமது பகுதி மீனவர்களுக்கு தொழில்வாய்பப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.
உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடியாக தடை செய்யுங்கள். 
இந்த விடயத்தில் பல தரப்பினர் உரிய முறையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது.. தனி நபர் இதில் சம்பந்தப்பட்டு நடைபெறவில்லை பல்வேறு தரப்பினர் தொடர்புபட்டுள்ளார்கள். எனவே சட்டத்தின் படி செயற்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அங்குள்ள உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த தொழில் முறையை நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசுடன் பேசி சரியான முடிவை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இனவாதியாக நோக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்க படுகின்றது. 
அதேவேளை  சட்ட ரீதியாகச் செயற்பட்டு வருகின்ற பிரதேச செயலாளரை இனத்துவேசமாக தென்னிலங்கையிலுள்ளவர்கள் நோக்குவதாக அரச அதிபர் தெரிவித்தார்.
அதேவேளை பல்வேறு அச்சுறுத்தல்கள் பிரதேச செயலருக்கு விடுக்கப்பட்டு வருவதாக பருத்திதுறை பிரதேச சபைத் தவிசாளரும் தெரிவித்தார்.
Print Friendly, PDF & Email