-பிரதமர் ரணில்
ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்களான விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் விஷேட கலந்துரையாடலை நடாத்தி இருந்தார்.
அதன் போது யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கும் போது ,
இந்த மண்ணிலே உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு சகல மக்களுக்கும் உரித்துள்ளது. அந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அடுத்து முன்னாள் போராளிகள் இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தி இருந்தனர்.
முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டு அவர்கள் ஜனநாயக வழிமுறைக்கு திரும்பி வாழ்கின்றனர்.
அதே வேளை அவர்களின் கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சி எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாகவும் உள்ளது. எனவே விசாரணைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரிடம் கூறி இருந்தார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் . இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.