SHARE

இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பொதுமகன் ஒருவரது மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறித்து சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்று முற்பகல் யாழ் முட்டாஸ்கடை சந்தியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இளம் தம்பதியினர் தமது சிறு பிள்ளையுடன் யாழ். வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற வேளை போக்குவரத்து பொலிஸார் அவர்களை மறித்து வாகன அனுமதி மற்றும் காப்புறுதி பத்திரம் ஆகியவற்றை சோதனையிட்டுள்ளனர்.

இச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் வாகனத்தின் அனுமதி பத்திரம், காப்புறுதி ஆகியவற்றையும் காட்டியதுடன் வாகன் செலுத்துவதற்கான அனுமதி பத்திரமானது பிறிதொரு போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் இருப்பதாக கூறி அதற்காக பொலிஸாரால் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டை காண்பித்துள்ளார்.

இதன்போது குறித்த பற்றுச் சீட்டு செல்லுபடியற்றது என குறிப்பிட்டு தமக்கு இலஞ்சம் தருமாறு கோரியுள்ளனர். அதற்கு அந்நபர் தன்னிடமுள்ளப்பணம் தனது பிள்ளையின் மருத்துவ செலவுக்கு தேவையான பணம் எனவும் எனவே தரமுடியாது என கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் அவரது மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்போவதாக கூறி அங்கிருந்த வாகனமொன்றை அழைத்துள்ளனர். அதற்கு அந்நபர் தனது மோட்டார் சைக்கிளை ஏற்றவிடாது தடுத்து வாக்குவாத்த்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் அச் சந்தியில் அதிகளவான பொதுமக்கள் கூடிவிட்டனர்.

இதனையடுத்து அங்கிருந்த போக்குவரத்து பொலிஸார் தமது பொலிஸ் நிலைய வாகனத்தை வரவழைத்து அதில் அம் மோட்டார் சைக்கிளை ஏற்றிச் சென்றுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை வடமாகாண முதலமைச்சர் யாழில் தற்போது சட்டம் ஒழுங்கு முன்னேற்றகரமானதாக உள்ளதாக கூறியிருந்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Print Friendly, PDF & Email