கிழக்கு மாகாணசபையில் தவிசாளர் பதவியையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியே பறித்துக் கொண்டுள்ளது.
அண்மையில் கிழக்கு மாகாணசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில், 14 ஆசனங்களை வென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு முதல்வர் கனவை உடைத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நஜீப் அப்துல் மஜீத்தை ஆளும்கட்சி முதல்வராக நியமித்தது.
அமைச்சர்கள் நியமனத்தின் போது தமிழர்கள் எவருக்கும் சிறிலங்கா அரசு வாய்ப்பு அளிக்கவில்லை.
இந்தநிலையில் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் பதவிகள் ஆளும் கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனால் தவிசாளர் பதவியையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியே கைப்பற்றியுள்ளது.
நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆரியவதி கலப்பதி தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
பிரதித் தவிசாளராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த சுபைர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.