SHARE
image_pdfPRINT

சீலரத்ன தேரர் அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து விலகியவர்களை தமது கட்சியுடன் இணையுமாறு பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சீலரத்ன தேரர் தலைமையிலான ஜனசெத பெரமுன கட்சி இன்று வேட்பு மனுதாக்கல்  செய்த போதே  பத்தரமுல்ல சீலரத்ன தேரர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று பிளவடைந்துள்ளது. எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

அதேபோல் பொதுஜன பெரமுன மற்றும் ரணில்விக்ரமசிங்கவிடம் இருந்து விலகியவர்கள் அனைவரையும் எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான கொள்கைகளில் எந்தவித மாற்றங்களும் இல்லை என்றே கூறவேண்டும்.

அதாவது 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க பின்பற்றியதனையே தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் பின்பற்றுகின்றார். இதில் மாற்றம் எதுவும் இல்லை.

நான் ஜனாதிபதியிடும் ஒரு கோரிக்கையினை முன்வைக்கின்றேன். அதாவது சர்வதேச நாணயநிதியத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அதனை உண்மைத்தன்மையுடன் மக்களுக்கு பகிரங்கபடுத்துங்கள்” இவ்வாறு பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.